சனி, 15 ஜூன், 2013

கொல்லிமலை - அபூர்வ மூலிகைகள் அழிந்துப்போகும் அபாயம் !


நாமக்கல் – கொல்லிமலை சாமிகள்  - கோ.ஜெயக்குமார்

சித்தர்கள் போர்வையில் கொல்லிமலையை அபகரிக்கும் பயங்கர கும்பல் !...
அநியாயத்தை தட்டிக்கேட்டதால் அடித்து விரட்டும் கொடுமை !...
சமூக விரோதிகளால் அபூர்வ மூலிகைகள் அழிந்துப்போகும் அபாயம் !...
==========
இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம், துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தில் வாழ்பவர்கள் தான் உண்மையான சித்தர்கள். இப்படி காடுகளில் சுற்றி திரியும் சித்தர்களையும், அவர்கள் பேரில் உலவும் போலிகளை பற்றியும் இப்போது பார்ப்போம்.
கொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே நமக்குத் தெரிகிறது. ஆனால் இந்த கொல்லிமலையில் தான் பல அதிசய மூலிகைகள் கிடைகின்றன. இவற்றை அபகரிக்க பல போலி ஆசாமிகள் சித்தர்கள் என்ற போர்வையில் இங்கு பலரை ஏமாற்றி பிழைக்கும் சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை வன மூலிகைகளால் நிறைந்துள்ள இடம்தான் கொல்லிமலை. அடர்ந்த காடுகளும், குறுகளான மலைப் பாதைகளில் 70 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது இந்த மலை, சுமார் 1300 மீட்டர் வரை உயரமும், 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இயற்கை பொக்கிஷமான இந்த கொல்லிமலை, இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி என்ற குறுநில மன்னன் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மலையின் அடர்ந்த பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த வல்வில் ஓரி குறுநில மன்னன் ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான், காட்டுப் பன்றி ஆகிய கொடூர மிருகங்களை கொல்லும் அளவிற்கு வல்வில் ஓரி வீரம் செறிந்த மன்னன் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த கொல்லிமலையில் முக்கனிகளும், ஏலம், லவங்கம், இஞ்சி, சோம்பு, சீரகம், மலைத்தேன் என பல்வேறு விலை மதிக்க முடியாத மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை பொருட்களும் விளைகின்றன.
இங்குள்ள உயிரினங்களை வேட்டையாடி கொல்வதால்தான் இந்த காட்டுப் பகுதிக்கு கொல்லிமலை என்று பெயர் வந்ததாக  கூறப்படுகிறது. அதோடு இந்த மலையில் வாழும் மக்களை கொல்லிப்பாவை என்ற பெண் காவல் தெய்வம் காத்து வருவதாகவும் அந்த மலைவாழ் மக்களால் நம்பப்படுகிறது.  
மேலும், இந்த கொல்லிமலை, சிவன், விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகள் உள்ளிட்ட முருகன், விநாயகர் கோயில்கள் நிறைந்த தளமாகவும் விளங்குகிறது. இங்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அறப்பள்ளீஸ்வரர் கோவில் அங்குள்ள அய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. அதோடு ஆகாய கங்கை அருவி, படகு சவாரி, வியூ பாயிண்ட், ஓரி பண்டிகை என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கொல்லிமலையில் இருக்கின்றன.
ஆங்காங்கே கோவில்கள், சித்தர்கள் வாழ்ந்த குகைகள் என மூலிகைகள் நிறைந்த வனம் இது. பல தலங்கலிருந்து வரும் சித்தர்கள் பலர், இங்கு மாதக்கணக்கில் தங்கி தவம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதனால், மலையின் பல இடங்களில் சித்தர்களின் நடமாட்டம் அதிகமாகவே தென்படும். அவர்கள் வெளி உலகை மறந்து சதா தியானத்திலும், மூலிகைகளை தேடுவதிலும் ஈடுபடுவர். அதுமட்டுமின்றி 180 அடி உயரத்திலிருந்து அற்புதமாய் விழும் அருவி என இயற்கை அதிசயமான ஒரு புதிரான பிரதேசமாகவே கொல்லிமலை நமக்குத் தென்படுகிறது.
பல நூற்றாண்டுகள் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் உலக பிரசித்திப் பெற்றது. இங்கு கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் போன்ற அரிய மூலிகைகளுக்கு பஞ்சமில்லை.  
மேலும், கொல்லிமலையில் அமைந்துள்ள சீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர் ஆலயம், பஞ்சந்தி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொரு திசையில் இருக்கும் அதிசயங்கள் இந்த மலைக்கு பெருமை சேர்க்கின்றன.
இங்குள்ள கொல்லிப்பாவை கோயில், உண்மையில் பார்ப்பவர்களை அச்சம் கொள்ளச் செய்யும். அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு சுற்றூலா பார்வையாளின் எண்ணிக்கை அதிகம்தான். இங்கு யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றித்திரியும் சிலரை பார்க்க முடிகிறது. இவர்கள் யாரும் பிச்சை கேட்பதில்லை. ஆனால், அறப்பளிஸ்வரர் கோவில் பகுதியில் அதே சடாமுடி தோற்றத்துடன் இருக்கும் சிலர் பிச்சை கேட்பதை காணலாம்.
இங்கு வாழும் சித்தர்கள் கடும் பசி எடுத்தாலும் உணவிற்காக அருகில் உள்ள கிராமங்களுக்கும் செல்ல மாட்டார்கள். காட்டிலே கிடைக்கும் பழங்கள், கிழங்குகள் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து வருவார்கள்.    
இந்த கொல்லிமலையில் வாழ்ந்த பண்டைய கால சித்தர்கள் செடி, கொடிகளை ஆய்வு செய்து அவற்றிலிருந்து மூலிகைகளை தயாராக்கி மனிதனின் பிணியை போக்க உதவியிருக்கிறார்கள். அவர்கள் தாம் பெற்ற அனுபவத்தால் மனிதனின் உடலையும் ஆய்வு செய்து,  நாடிகள், பித்தங்கள், ஞானேந்திரங்களுக்கு வரும் உடல் உபாதைகள் அனைத்துக்கும் தெளிவான மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.
சித்த மருத்துவத்தைப் பொருத்த மட்டில் பின்விளைவுகள் என்ற பயம் இல்லை. மற்ற மருத்துவத்தில் ஒரு நோய் குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் மருந்தால் மற்றொரு நோயை தோற்றுவிக்கும் குணம் இருக்களாம். இப்படி ஒரு நோயை குணப்படுத்தி மற்றொரு நோய்க்கு வழிகாட்டியாக அமைந்துவிடும் கொடுமை மற்ற மருத்துவங்களில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான சித்த வைத்தியத்தில் இந்த தன்மை அறவே இல்லை.
சித்த மருத்துவத்தில் பின்விளைவுகள் இல்லாதது எத்துனை சிறப்போ, அது போலவே பத்தியமும். சில நோய்களுக்கு இந்த மருத்துவத்தில் உணவு கட்டுப்பாடு உண்டு. அப்படி செய்வதால், பல ஒவ்வாமை பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன.
இன்றளவும் சித்தர்களைப் பற்றி பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள விரும்புவது அவர்கள் கடைபிடிக்கும் ரசவாதம் என்கிற மகிமையால்தான். ரசவாதம் என்பது ஒரு வகையான வேதியியல் முறை. எளிய உலோகங்களுடன் சில வகையான தாவரங்களை சேர்த்து தங்கம் தயாரிக்கும் முறையாகும்.
சொர்ணம் என்றதுமே சொக்கி போய்விடும் பல மனிதர்கள் இந்த ரசவாத சூட்சமம் அறிந்துகொள்ள, காடுகள், மலைகள் என அலைந்து, கோடிக்கணக்கில் ரூபாய்களை ஆய்வுக் கூடங்களில் செலவு செய்துக்கொண்டு தங்களின் வாழ்க்கையை வீணே கழிப்பவர்கள் உண்டு.
இப்படி சித்தர்களின் பெருமைகள் பல இருந்தாலும், காவி உடை உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, கோபுரம் போல கொண்டையும், முழங்கால் வரை தாடியையும் வளர்த்து பெரும் சித்தர் என்று உலா வருபவர்கள் உண்டு. இதுபோன்ற போலி சித்தர்கள் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதுதான் வேதனை.
இந்நிலையில், கொல்லிமலையில் இருக்கும் சில சித்தர்கள் என்ற போர்வையில், பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு அங்குள்ள அப்பாவி மக்களை நடுநடுங்க வைக்கின்றனர். சித்தர் வேடமிட்டு திரியும் இந்த கருங்காலிகள், இங்கு பல இடங்களை வலைத்துப்போட்டு தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
தங்களின் களவாணித்தனம் எங்கே வெளிப்பட்டு விடுமோ என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதற்காக இந்த இடத்தை நாடிவரும் உண்மையான சித்தர்கள் தங்களை அண்டவிடாமல், தாங்கள் மட்டுமே பெரிய சித்தர்கள் என்று கூறிக்கொண்டு இந்த கருங்காலிகள் வலம் வருகின்றனர்.
மேலும், இவர்கள் வலைத்துப்போட்ட இடங்களில் சுற்றுலாவிற்கு வரும் பயணிகளுக்காக ஓட்டல்கள் நடத்தியும், அநியாய விலைக்கு மூலிகை பொருட்களை விற்றும் ஒரு நாட்டாமை போன்ற அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
அப்படி அடிவடி செய்து பிழைப்பு நடத்திவரும் துரைசாமி என்ற ஒரு போலி சித்தரை நோக்கி நகர்ந்தது நமது கேமரா. நமது படக்குழுவினரை கண்டதும் ஓடி ஓளிந்த அந்த போலி சித்தரை விடாமல் பிந்தொடர்ந்ததும் முதலில் மிரண்ட அவர், பிறகு சுதாரித்துக்கொண்டு ஒரு ரவுடியைப் போல கேமராவை நோக்கி பாய்ந்துவந்து தகறாறு செய்தார்.
அற்புதமான மூலிகைகளை கொண்ட கொல்லிமலை இப்படி கயவர்களின் கையில் சீர்குலைக்கப்படுவது ஒரு வாடிக்கையாகி விட்டது என்றே கூறலாம். இதேபோல கடந்த ஆண்டு "ஜெனித் ஹெர்பல்' என்ற பெயரில் மூலிகை நிறுவனம் ஒன்றை நடத்திவதாக கூறிய ஒரு நபர். இந்த மலையில் கிடைக்கும் அரிய மூலிகைளை வேளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இதனால் தங்களது மூலிகை நிறுவனத்தில் முதலீடு செய்தால், 45 நாட்களில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம்பரங்கள் செய்தார்.
இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரமான நிலங்களையும், நகைகளையும் விற்று பணத்தை முதலீடு செய்தனர். அதுமட்டுமின்றி அந்த நபர் தனது நண்பர்கள் துணையோடு சேலம் மாவட்டத்தில் உள்ள நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி வெடிகாரன் தெரு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கணபதி நகர், பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஏஜன்டுகளை நியமித்து கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வரை பணத்தை சுருட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான சித்தர்கள் மக்களுக்காக தங்களை வருத்தி வாழ்பவர்கள். இயற்கையில் கிடைக்கும் அரிய மூலிகைகளை மருந்துகளாக தயார் செய்து மனித உடலில் தோன்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதோடு, டாக்டர்களாலேயே கைவிடப்பட்ட பல பயங்கரமான உயிர் கொல்லி நோய்களையும் இந்த பிரசித்தி பெற்ற கொல்லிமலை மூலிகை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்று மக்களால் நம்பப்படுகிறது.
காடுகளிலும், மலைகளிலும் தவம் செய்யும் யோகிகளாலும், விலங்குகளாலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூரும் இருப்பதில்லை. ஆனால், பொதுமக்கள் சிலர் தங்களின் சுய லாபத்திற்காக காடுகளுக்கு சென்று அங்கு வாழ்பவர்களின் வாழ்க்கைக்கு உலை வைப்பதால்தான் பல பிரச்சினைகள் உருவாகின்றன என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.
==========

2 கருத்துகள்:

  1. கொல்லிமலையின் வரலாற்றை தெளிவாகவும் ,அழகு தமிழில் தமிழ் சமுதாயத்திற்கு அளித்திட்ட முனைவர்
    திரு கோ.ஜெயக்குமார்ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் ஆழ் மனதின் வாழ்த்துக்கள்

    அனபுடன்
    எல்.தருமன்
    18.பட்டி.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஆனால் ஒரு இடத்தில் எழுத்துக்கள் மறைக்கப்பட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு