ஞாயிறு, 9 ஜூன், 2013

மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்





அழகர் கோயில்

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இந்த மலையில் அமைந்திருக்கும் சோலை மலை என்ற குன்றில்தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. பழமுதிர் சோலை ஆலயத்தின் தொலைபேசி எண்; 0452-2470375

காந்தி அருங்காட்சியகம்

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் 1959ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. நாதுராம் விநாயக் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கரையுடன் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. இராணி மங்கம்மாள் அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது. மகாத்மாகாந்தி பற்றிய புகைப்படக் காட்சியும் தென்னிந்தியக் கைத்தொழில் கதர் மற்றும் கிராமியத் தொழில் பிரிவுக் கண்காட்சிகளும் உள்ளன. நேரம் காலை 10 - 1 மணி வரை. பிற்பகல் 2-5.45 மணி வரை.

கோச்சடை அய்யனார் கோயில்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் வீற்றிருக்கும்கோச்சடை அய்யனார் மதுரை மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக இந்தக்கோயில் எழுந்து நிற்கிறது.

கூடல் அழகர் கோயில்


தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான வைணவக் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொலைபேசி - 0452-2338542.

குட்லாம்பட்டி அருவி
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. குட்லாம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறுமலைக் குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது குதூகலமான அனுபவம். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்தப் பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்


மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சிதான். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலின் மூலக் கட்டட அமைப்பை குலசேகர பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். பின்பு 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் இதை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். இந்தப் பிரமாண்டமான கோயிலின் 12 கோபுரங்களும் தமிழகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. இம்மாளிகையில் இசையும் நாட்டியமும் அன்றாடம் மன்னர் முன்னிலையில் அரங்கேறியுள்ளன.

இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது. தொலைபேசி - 0452 - 2332945.

திருப்பரங்குன்றம்

மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று. இதன் உட்புறம், வைரம் பாய்ந்த பாறையில் இருந்து செதுக்கி சீர் செய்யப்பட்டது.

இராஜாஜி பூங்கா

மதுரை மாநகராட்சி கட்டடமான அண்ணா மாளிகைக்கு அருகில் உள்ளது அழகிய ராஜாஜி பூங்கா. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தப் பூங்காவை மாநகராட்சியே பராமரித்து வருகிறது. குடும்பத்துடன் பொழுது போக்கச் சிறந்த இடம். நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. விடுமுறை இல்லை. நுழைவுக் கட்டணம் 1 ரூபாய். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. தொலைபேசி - 0452-2531012.

இராமகிருஷ்ண மடம்

பேலூர் மற்றும் ஹவுராவில் தலைமை அலுவலகங்களைக் கொண்ட ராமகிருஷ்ண மடத்தின் மதுரைக் கிளை. தொலைபேசி - 0452-2680224-2683900.

ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்


மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 10 கி .மீ தொலைவில் 6 ஆவது நிறுத்தத்தில் திருநகரில் இந்தத் தியான மண்டபம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மிகப்பழமையான தியான மண்டபங்களில் இதுவும் ஒன்று.
பார்வை / தியான நேரம் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை. தொலைபேசி - 0452-2484341.

திருமோகூர் கோயில்

மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் ஒத்தக்கடையில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள விஷ்ணு கோயில் இது. காளமேகப் பெருமாள் செண்பக வள்ளி சுதர்சனா சமேதராய் இங்குக் காட்சியளிக்கிறார். தொலைபேசி - 0452-2423227.

திருவாதவூர் கோயில்

மதுரையிலிருந்து 25 கி.மீ. ஒத்தக்கடையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் இது. சைவ சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இந்த ஊரில் சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளி உள்ளனர்.

வண்டியூர் மாரியம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார் மன்னர். மிகப்பெரிய தெப்பக் குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.

அரசு அருங்காட்சியகம்

காந்தி அருங்காட்சியக வளாகத்துக்குள்ளே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது திறந்து வைக்கப்பட்டது.

சித்திரைத் திருவிழா:- தமிழகத்தின் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மனுக்காக கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும். சித்திரை மாதம் முதல் நாள் தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக