சனி, 31 மே, 2014

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.


சித்தன்னவாசல், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்ற ஊர் ஆகும். சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மாறி சித்தன்னவாசல் என்று ஆனது.

உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது.

இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை உலகுக்கு உணர்த்துகிறது.

இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடமாகும் இது. இந்த இயற்கை குகையில் வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம். இதில் மிகப்பெரிய, பழமையான படுக்கையில், தமிழ் கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள 7 படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது.
ஆனால், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து, உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனவும் பெயர் பெற்றதாக மற்றொரு செய்தி கூறுகிறது. குகைக் கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும், அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய கருவறையும் உள்ளன.
முன்மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் சமண ஆசிரியரின் சிற்பம், தெற்கில் 5 தலைபாம்புடன் கூடிய 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்களும் உள்ளன.

குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் Fresco-Secco முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் சமீபகாலத்தில் உண்டான இந்த முறை வண்ணங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஓவியக் கலையின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.
முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அனைவரின் சிந்தையையும் கவரும். சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். மணிமேகலை கூறும் வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத் தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக்குலுங்குகின்றன. பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன.

அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன.
மேலும், அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும், அமைதியையும் பண்பட்ட கலைத் திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காண முடியும். இந்திய ஓவியக்கலை பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கை சித்தன்னவாசல் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள ஓவியங்களைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, நெடுநல்வாடை என பல சங்க நூல்கள் எண்ணற்ற தகவல்களை தருகின்றன.

இத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஓவியங்களை அல்ல அல்ல உயிர் நாடிகளை எவ்வாறுதான் வரைந்திருப்பார்களோ என்று எண்ணும் போது நமக்கு வியப்புத்தான் ஏற்படுகிறது.

சில ஓவியங்கள் சிதிலமடைந்து விட்ட நிலையில் இருந்தாலும், அதன் அழகில் எந்த மாறுபாடோ, குறைபோடோ ஏற்படவில்லை.

கால மாறுபாடுகளால் பல ஓவியங்கள் முற்றிலும் சிதைந்து விட்ட போதிலும், எஞ்சியிருக்கும் ஓவியங்கள் தான், அக்காலத்தில் தமிழகத்தின் ஓவியக் கலை மற்றும் நாட்டியக் கலைக்கு நமக்கும், எதிர்கால சந்ததியருக்கும் சான்றாக அமைந்துள்ளது.

சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.

இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.

சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.

மலைகளில் செதுக்கப்பட்ட முனிவர்கள் சிற்பங்கள் போன்ற சிற்பங்களும், கோலம் போன்ற வட்ட வடிவ அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.

சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.

தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.

உலக புகையிலை எதிர்ப்பு நாள் புகை வேண்டாம் - கோ.ஜெயக்குமார்

 உலக புகையிலை எதிர்ப்பு நாள் புகை வேண்டாம் - கோ.ஜெயக்குமார்.
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை மோசமானதுதான்.

அதிகரிக்கும் இறப்புகள்

உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக Lancet oncology journal-ன் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.
புகையிலை எதிர்ப்பு சின்னம்
உலக அளவில்

புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபித்துவிடும். இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.

இந்திய அளவில்

சரி, இந்தியாவின் நிலைமை? இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பாதிப்புகள் என்ன?

புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

யாருக்குப் பாதிப்பு

“ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லார்மின்.

நிறுத்துவோம்

இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடிப்பது, பான், குட்கா, புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டும். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து அது வேகமாக நிகழும்.
புகையிலை விளம்பரங்களுக்கு நாடு முழுக்க திடீர் தடை:  மத்திய அரசு அவசர உத்தரவு
புகையிலை எதிர்ப்பு நாள்

புற்றுநோய் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைக்கு உலக விருப்பமாக உள்ளது. இதை 27 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டுக்கான வாசகம், புகையிலை மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

ஞாயிறு, 25 மே, 2014

விக்டோரியா மகாராணி ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.


விக்டோரியா மகாராணி  ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.


விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இதுவரை பிரிட்டன் அரசை ஆண்டதில் இதுதான் அதிக வருடம். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

63 ஆண்டுகள், ஏழு மாதங்களுக்கு இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலணிகளையும் ஆண்டார்.உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.
சென்னை ஒரு பெரிய நகரமாக ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் உருவானது. ரயில், கப்பல் போக்குவரத்து ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாணிபம், தொழில், வேலை நிமித்தமாக மக்கள் குடிபெயர்ந்து வந்தார்கள்.
ஆங்கிலேய அரசாங்கம், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கவர்னர் ஜெனரல் காரன் வாலீஸ், ராணுவ ஜெனரல் நீல் ஆகியோரின் சிலைகளை நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்தது. அப்படி வைக்கப்பட்டதன் நோக்கம், "ஆளும் பரம்பரையினரை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பொதுமக்களிடம் சொல்வதுதான். அந்த அதிகார வர்க்கத்தினரின் சிலைகள் அரசின் பணத்திலும், அரச விசுவாசிகளான இந்தியர்களின் நன்கொடையிலும் உருவாக்கப்பட்டவையாகும்.

அவை, இங்கிலாந்தில் இருந்த மிகச்சிறந்த சிற்பிகளால் படாடோபமான தோரணையில் உருவாக்கப்பட்டவை. அவை சிலையாக இருப்பவர்களின் ஆத்மாவை பிரதிபலிப்பதை விடவும் கலைஞர்களின் கைவண்ணத்தாலேயே சிறப்புப் பெற்றவையாகும்.

காரன் வாலீஸ் இங்கிலாந்தின் தளபதியாக அமெரிக்கர்களை எதிர்த்து போரிட்டான். ஜார்ஜ் வாஷிங்டனிடம் தோற்றுப் போனான். இங்கிலாந்து திரும்பிய அவனை பத்தாண்டுகள் கழித்து இந்தியாவிற்கு முதல் கவர்னர் ஜெனரலாக அனுப்பி வைத்தார்கள். அவன் திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்தில் தோற்கடித்தான். பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பிடித்து வைத்துக் கொண்டான். அவன் சிலையில் திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களை ராணுவத்தளபதி ஜெனரல் நீல் பீரங்கி முன்னால் நிறுத்தி சுட்டுக் கொன்றான். இவர்கள் இருவருக்கும் சென்னையில் வைக்கப்பட்ருந்த சிலைகளை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அகற்றப்பட்டு கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.



சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சிலை சர் தாமஸ் மன்றோவின் சிலை. அது முழுக்க முழுக்க பொதுமக்கள் நன்கொடையாக கொடுத்த பணத்திலிருந்து இங்கிலாந்தின் பிரான்சிஸ் லக்கெட் சாண்ட்ரி என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.



சென்னை ராஜதானியின் கவர்னராக இருந்த தாமஸ் மன்றோ ஒரு தையற்கலைஞரின் பேரன். இவர் சென்னை ராஜதானியின் கவர்னராகி மக்கள் அன்புக்கு உரியவராக இருந்தார். ரயத்துவாரி என்ற நிலசீர்திருத்தம் செய்தார். அதனால் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.


ஆங்கிலேயர்கள் சுதேசி மக்களை சவுக்கால் அடிப்பதைப் பார்த்த மன்றோ "யார் உங்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது' என்று கண்டித்தார். காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1827இல் இறந்துபோன சர் தாமஸ் மன்றோ, சேனம் இல்லாத குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். 1839ஆம் ஆண்டில் இந்த சிலை வைக்கப்பட்டது.

உயர்ந்தவர்களுக்கு சிலை வைத்து சிறப்பு செய்வது நெடுங்காலமாகவே மக்கள் மரபாக இருக்கிறது. அது ஒரு பண்பாட்டுச் செயல். தங்கள் நாட்டையும், தங்கள் முன்னோர்களையும் நிலைநாட்டும் முறை. அதன் வழியாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்வது.கிரேக்க, ரோமானிய, எகிப்து நாடுகளில், கடவுள்களுக்குச் சிலை வைத்ததுபோலவே மன்னர்கள், தத்துவ ஞானிகளுக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அங்கு நல்லவர்களுக்கு மட்டுமல்ல கெட்டவர்களுக்கும் சிலை இருக்கிறது. சில சிலைகள் ஆட்சியாளர்களே வைத்துக் கொண்டவை.

தமிழர்கள் நெடுங்காலமாகவே சிலைகள் செய்து வைக்கும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கோர் எடுத்துக்காட்டு நடுகல். ஊருக்குள் புலி போன்ற விலங்குகள் புகுந்து விட்டால் அவற்றை எதிர்த்து உயிர் துறந்த வீரனுக்கும் மற்றும் அரசனின் போர்ப் படையில் சேர்ந்து எதிரிகளோடு போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கும் ஊருக்குள் நடுகல் நட்டார்கள்.

நடுகல்லில் அவன் பெயரும், பீடும் பெருமையும் எழுதி மயிற்தோகை சாற்றி, நறுமண புகை கமழச்செய்து வழிபட்டார்கள் என்று தமிழ்ப் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.வெளியூர்களில் இருந்து புதிதாக ஊருக்குள் வருபவர்கள், நடுகல்லாக நிற்கும் வீரனைப் பார்த்து ஐயன் யாரென வினவினார்கள். ஐயன் யார் என்பதே காலப்போக்கில் ஐயனாராகி விட்டது. காக்கும் கடவுளாக ஊரின் எல்லையில் இமைக்காத விழிகளோடும், கரத்தில் பிடித்த கத்தியோடும் இருக்கிறார். இரவில் புரவி மீதேறி வேட்டை நாய் பின்தொடர விடியுமளவு சுற்றிச் சுற்றி வந்து கெட்ட ஆவிகளிடம் இருந்து மக்களைக் காக்கிறார் என்பது ஐதீகம்.
File:Victoria farthing.jpg
கலையென்பதே ஐதீகமும் நம்பிக்கையும்தான். காக்கும் கடவுளைப் போற்றிக் கொண்டாடுவது போல, உழைக்கும் மக்களை, தொழிலாளிகளை போற்றுவதும் மரபாகவே இருந்து வந்திருக்கிறது. தொழிலாளி என்றால் அறிவும் ஆற்றலும் கொண்டவன். சிறிதும், பெரிதுமான பல கருவிகளைச் செய்து, அவற்றைக் கொண்டு மனித சமூகத்தையே முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவன்.  அவன் ஆற்றலையும் அதனைப் பயன்படுத்துவதையும் சொல்லும் சிற்பமாக சென்னை கடற்கரையில் இருப்பதுதான் உழைப்பாளர் சிலை. நான்கு தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பெரும் பாறையை நெம்புகோல் கொண்டு உருட்டிக் கொண்டு போவதுதான் அச்சிலை.

இந்தியாவின் முதல் ஓவிய சிற்பக் கல்லூரியான சென்னை கவின் கலைக்கல்லூரி முதல்வராக, இருபத்தைந்து ஆண்டுகள் இருந்த தேவிபிரசாத் ராய் சௌத்ரியின் கலைப்படைப்பு இந்த உழைப்பாளர் சிலை. அவரின் மற்றொரு படைப்பு கடற்கரை சாலையில் உள்ள, கையில் பிடித்தத் தடியைத் தரையில் ஊன்றி வேகமாக நடந்து செல்லும் மகாத்மா காந்தியின் சிலை. அந்த சிலை காந்தி மாதிரியே இல்லையென்று அப்போது சிலர் புகார் சொன்னார்கள். பொது இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் ஒருவருடைய சிலை அல்லது சிற்பம் அச்சு அசலாக அவரைப்போன்றே முகபாவனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஒரு கலைஞன் படைப்பில் ஆத்மாதான் முக்கியம். சம்பந்தப்பட்டவரின் ஒரு சாயல் வந்தால் போதும். காந்தி எப்பொழுதும் வேகமாக நடப்பவர். அந்த நடையையே காந்தியின் குறியீடாக  சிற்பி ராய் சௌத்ரி படைத்துள்ளார்.
பொது இடங்களில் வைக்கப்படும்  சிலைகள் என்பவை, ஒரு நாட்டின் கலைமரபு, படைப்பாற்றல், தொழில் திறன் போன்ற பலவற்றையும் ஒன்று சேர்த்து கொண்டிருக்கின்றன. அவை அவ்வாறு படைக்கப்பட்டதால், மனிதர்களை பிரமிக்க வைக்கின்றன. "இது மனிதர் படைத்ததுதானா' என்ற கேள்வியையும் கேட்க வைக்கின்றன. அவ்வகை சிற்பங்களில் முதலில் இருப்பது, ஒன்பதாம் நூற்றாண்டில் ஐம்பொன்களில் தமிழர்கள் வடித்தெடுத்த ஆடல் வல்லானின் சிற்பம். திருவாலங்காட்டில் ஆடிய ஆடல்வல்லான் என்னும் நடராஜர் கலைப் படைப்பின் உச்சமாகி, வரவேற்பு அறைகளில் முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டார்.

உயர்ந்தப் படைப்பென்று குறிப்பிட வேண்டிய இன்னொரு படைப்பு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி. ஒரு பெண்ணின் பூரண அழகும் அமைதியும் கொண்டு மிளிரும் சிற்பம் அது. உலகம் முழுவதற்கும் புத்தொளி வீசுகிறது. பிரஞ்சு நாட்டுப் படைப்பென்றாலும் மனித சமூகம் முழுவதையும் அது வசீகரித்துக் கொண்டிருக்கிறது.


பொது இடங்களில் சிலைகள், சிற்பங்கள் வைப்பது கூடிக்கொண்டே வருகிறது. சர்வாதிகாரிகளில் சிலர் தங்களுக்குப் பெரிய சிலைகள் செய்து முக்கிய இடங்களில் வைத்துக் கொள்கிறார்கள். சிலர், தங்களை முன்னேற்றியவர்களுக்கும்கூட சிறியதாக சிலை செய்து வைக்கிறார்கள். ஆனால் அவை கலைப்படைப்புகளாக இல்லாமல் வெறும் உருவ பொம்மைகளாகவே இருக்கின்றன. ஆனாலும் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் ஆட்சி மறைந்ததும் அவர்களின் பொம்மைகள் அவசர அவசரமாக அகற்றப்படுகின்றன. சில சிலைகள் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அது மக்களின் கோபம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு.
மக்களுக்குப் பிடித்தமான தத்துவ ஞானிகள், சீர்திருத்த செம்மல்கள், கவிஞர்கள், கலைஞர்கள் போன்றோரின் சிலைகள் மதிக்கப்படுகின்றன. சமூகம் எப்படி இருந்தாலும், மக்கள் தங்களின் அசலான சகோதரர்களை, முன்னோடிகளை அறிந்து கொண்டு அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
தமிழ் மட்டுமே அறிந்த உ.வே. சாமிநாதையர் அவர்களில் ஒருவர். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரின் சீர்மிகுந்த சிலைக்கு ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளன்று  பலரும் வந்து வணக்கம் செலுத்துகிறார்கள்.சென்னை மெரீனா கடற்கரையில் திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஒளவையார் போன்ற பெருங்கவிஞர்கள் சிலைகளாக நிற்கிறார்கள். அவர்களைக் கண்டு பெருமிதம் கொண்ட புகழ் பெற்ற மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன், "என் ஆதி கவிஞகளே' என்று தொடங்கும் சிறந்த கவிதையொன்றை எழுதி இருக்கிறார்.

நிகழ்காலம், நகரங்களின் சந்தடி மிகுந்த இடங்களில் சிலைகள் வைக்கும் காலமாக மாறி வருகிறது. சிலர் பெரிய சிலை வைக்க, கோடிகணக்கான ரூபாய் செலவிட தயாராக இருக்கிறார்கள். அது தங்களின் இருப்பை நிலை நிலைநாட்டுமென்றும் பெருமைகளையும் சிறப்புக்களையும் பேசுமென்றும் கருதுகிறார்கள்.ஆனால் சரித்திரம் கருணையற்றது. அவை போன்ற சிலைகள் புறக்கணிக்கப்பட்டு, அசலானவர்களுக்கு வைக்கப்படும் சிலை - அது அளவில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும்கூட மக்களால் ஏற்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும்; வருகிறது.