சனி, 13 மே, 2017



தமிழரின் வரலாற்றை தாங்கி நிற்கும் கீழடி -முனைவர் கோ.ஜெயக்குமார்.


தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் தான் கீழடி (Keezhadi)  ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
அகழ்வாராய்ச்சி.
சர்ச்சையை ஏற்படுத்திய  கீழடி அகழ்வாராய்ச்சி  அதிகாரி மாற்றம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.

தமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.

கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைப் புதூரில் கண்டறியப்பட்ட பழங்கால சுடுமண் உறைகிணறுகள்.
அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
keezhadi
தொல்லையல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடம் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்றார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கி.பி 2 ம் நூற்றாண்டில் கீழடியில் சிறந்த நாகரிகம் தழைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன. அவை அனைத்து சான்றாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும்.

திங்கள், 6 மார்ச், 2017

தமிழ்த் தொன்மை மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வானமாமலையின் பங்களிப்பு - முனைவர் கோ.ஜெயக்குமார்.
தொல்லியல்ஆய்வுக் கட்டுரைகள்



தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தொன்மைகளையும், உலக அளவில் கேட்பாரற்று பாதுகாக்கப்படாமல் கிடைக்கப்பெறும் தரவுகளையும் கொண்டு ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். இதனைச் செய்தால் தான் முழுமையான தொன்மைகளை மீட்டெடுப்ப தோடு, பாதுகாக்கவும் முடியும். வரலாற்றுத் தொன்மைகள் குறித்தான முழுமையான ஆய்வும் நமக்கு கிடைக்கப்பெறும்.

பேரா. நா.வா. நமக்கு தொன்மைகள் குறித்த புரிதல் வேண்டும் என்று கூறுகின்றார். குறிப்பாக தமிழரின் நாட்டுக் கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. அவனது வாழ்க்கையில் கலையின் பணி யாது போன்ற வினாக்களின் ஊடாகவே கலையின் தன்மைகளை ஆராய முற்படுகின்றார். நமக்குள்ளே இதுபோன்று எழும் வினாக்களுக்கு விடை காண வேண்டும் என்றால் குறிப்பிட்ட சமூகம் பற்றியான முழுமையான புரிதல் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு இனத்தினுடைய அடையாளங் களாகவும், சான்றுகளாகவும் கிடைக்கப்பெறும் பொருட்கள், புதைக்கப்பட்ட மனிதர்களின் உடல், எலும்புகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் போன்றவற்றைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், பண்பாட்டையும் அறிய முடியும்.

குகைச்சித்திரங்கள் அனைத்தும் அழகுணர்ச்சி யால் தோன்றியவை அல்ல. ஆற்றல், நம்பிக்கை, சடங்கு இவற்றின் விளைவாகத் தோன்றியவை என்பதை அறிய வேண்டும்.

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவது எண்ணற்ற வேற்றுமைகளுக்கு மத்தியில் இயங்கும் தமிழ்ச்சமூகம். இரண்டாவது துல்லியமான வரலாற்று ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தாதது. இதனால் தான் கால ஆராய்ச்சியில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியம் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப்பிள்ளையின் நூலும், சமணர்களைப் பற்றிய சக்கரவர்த்தி நாயினார் எழுதிய நூலும், சோழ வம்சத்தைப்பற்றி கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூலும், பல்லவர் பற்றி பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆய்வாளர்கள் அறிந்தவையே. இருப்பினும் இவையே முழுமையான தமிழர் வரலாறு ஆகாது.

முழுமையான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டுமாயின் தமிழர் சமூகம் எப்படி மாற்றம் பெற்று வந்துள்ளன. அதற்கான அடிப்படைக் காரணங்கள் யாவை என்ற புரிதலோடு முழுமை யான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும். தற்போது நம் காலத்தில் பண்பாடு சார்ந்த பலவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் என்பதை நமக்கு முன்னரே நா.வா. எச்சரித்துள்ளார். சங்க இலக்கியங்கள், மூவேந்தர், சமணர், பல்லவர் பல ஆராய்ச்சி நூல்கள் வந்தாலும் அவை மட்டுமே போதுமானவை அல்ல. அது சார்ந்து மேலும் பல ஆராய்ச்சி நூல்கள் வர வேண்டும். தொன்மை சார்ந்த ஆராய்ச்சி தொடர வேண்டும்.

பண்டைய கலைகள் அனைத்தும் வாழ்க்கை யோடு தொடர்பு கொண்டவை. பிரான்சு நாட்டில் உள்ள ‘டோர்டோக்னே’ என்ற குகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்த ஓவியங்கள் காணப்படுகிறது என அகழ்வாய் வாளர்கள் கருதுவதையும், இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹோவுங்காபாத் அருகே பிம்பெட்கா நகரில் கண்டறியப்பட்ட செய்யப்பட்ட கருவிகள் அதே காலத் தொன்மை உடையவை என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

நடுகல் பற்றிய ஆய்வரங்கம் ஒன்று தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினரால் நடத்தப் பட்டது. 24. 7. 1973இல் நா.வா ‘நடுகற்களும் நம்பிக் கைகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை. ஒன்றை படித்துள்ளார். நடுகற்கள் பற்றிய முழுமையான புரிதலை விளக்கிக் கூறுகின்றார். சங்க இலக்கியத்தில் புறநானூறு 231ஆம் பாடலில் அதியமான் நெடுமான் அஞ்சி இறப்பைச் சுட்டிக்காட்டி நடுகல் பற்றிய சான்றை அவ்வை விளக்கியுள்ளதையும் குறிப்பிடு கிறார்.

நாட்டுத் தொழில்களில் கலை, சுவரோவியம், மண்பாண்ட அலங்காரம், பெருங்கோயில் கலைகள் போன்றவற்றை பண்டைய தமிழர்கள் வளர்த் தெடுத்தனர். இருப்பினும் நா.வா.வின் வருத்தம் தற்காலத்தில் நாட்டுக் கலைகள் பல அழிந்து வருகின்றன. அல்லது பணம் தரும் தொழிலாக மாறிவருகிறது. இந்த நிலையில் நாட்டார் கலை களை ஆய்வதற்கான துவக்க முயற்சிகள் கூட தமிழ்நாட்டில் ஈடுபடவில்லை. எனவே ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.

வரலாறு பற்றி நா.வா. தரும் விளக்கம் நமக்கு முழுமையான புரிதலை தரும்.

‘வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகவே போராட்டங்கள் நிகழ்கிறது. அப்போராட்டங் களின் விளைவாகச் சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன’

என்றும்

‘பொருளாதார வாழ்வையும் சமூக முரண் பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்’

என்றும் (தமிழர் வரலாறும் பண்பாடும், பக்- 4, 9) கூறுகிறார்.

வரலாறு என்பது சரித்திரங்களின் கால நிகழ்வுகளை விவரிக்கின்றன. இருப்பினும் தமிழ்ச் சமூகம் தோற்றம் முதல் பெற்று வந்துள்ள மாற்றங்கள், அதற்கான சான்றுகளோடு எழுதப்படும் வரலாறே முழுமையான வரலாறு என்று கூறுகின்றார்.

பழங்கால இனக்குழுச் சமூக வாழ்க்கையில் இருந்து படிப்படியாகவும், திடீரெனவும் முன்னேறி வரும் சமூகமாகவும், அரசுகளை நிறுவி, பண் பாட்டையும், கலைகளையும், தத்துவங்களையும் வளர்த்துப் பல நூற்றாண்டுகளாக முன்னேறியும் சில சமயங்களில் பின்வாங்கியும் வாழ்ந்த மனித சமூகத்தின் சரித்திரமே தமிழக வரலாறு என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் தொன்மை சார்ந்து பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் அது எப்படி நிகழ்த்தப் பட வேண்டும் என்ற புரிதலைப்பற்றிக் கூறும் நா.வா, இலக்கியத்தில் உள்ள சான்றுகளையும், அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டுகளுக்கு முந்தைய காலத்து சான்றுகளையும் அயல்நாட்டு வரலாறு, அவர்கள் நம்மோடு கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய குறிப்புகளோடு ஆராய வேண்டும். அப்போதுதான் முற்கால வரலாற்றை நாம் முழுமையாக அறிய முடியும்.

இடைக்கால வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும் என்றால் இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் பெர்சியன் மொழியில் எழுதிய வரலாற்றை விமர்சன ரீதியாக கற்கவேண்டும். ஆங்கில ஆட்சிக்கு முற்கால சரித்திரத்தை அறிய போர்த்துகீசிய பிரஞ்சுப் பாதிரிமார்களின் தாய்மொழியிலும் இலத்தீனிலும் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆராய்ந்தால் முழுமையான இடைக்கால வரலாற்றை நாம் பெற முடியும் என வலியுறுத்துகின்றார்.

தமிழகத்தில் கிடைக்கக்கூடிய வரலாற்றுச் சான்றுகளை எப்படி பாதுகாத்து வெளியிட வேண்டும் என்று தாமரை இதழில் நா.வா. எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகளான பல கல்வெட்டுகள் மைசூரில் இருப்பதாகவும் அவை கவனிக்கப்படாமல் அழிந்து கொண்டிருப்ப தாகவும் அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறுகின்றார்.

மதுரையில் நடைபெற்ற புதைபொருள் துறையின் கருத்தரங்கில் பேசிய ஒருவரின் கணக்குப் படி 20,000 கல்வெட்டுப் பிரதிகள் மைசூரில் தமிழக தொல் வரலாற்றுச் சான்றுகள் கவனிப்பாரின்றி அழிந்து வருவதாகவும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதே போல் நமது காலத்தில் பல இடங்களில் சிதறிக்கிடக்கும் தொன்மைகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். அது சார்ந்த வரலாற்று ஆய்வுகள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று பதிவு செய்கின்றார்.

மைசூரில் தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகள் பல அழிந்து வருவதற்கு காரணம் மத்திய அரசின் சாசனத்துறையை உதகையில் இருந்து மைசூருக்கு மாற்றியது. அதனை சென்னைக்கு கொண்டுவர வேண்டும் என்று அன்றைக்கு அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டதையும், மைசூரில் இருக்கும் இந்த சாசன நிறுவனம் நான்கு மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மைசூர் ஆகிய மாநிலங்களின் சாசனங்களை வைத்துள்ளது. எனவே அந்தந்த மாநிலத்திடம் அவர்களது சாசனம் ஒப்படைக்கப் பட்டு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பயனடைய முடியும் என்கிறார்.

மாநில அரசானது கொண்டுவரப்படும் தொன்ம சான்றாதாரங்களை உரிய முறையில் வைத்து அந்த துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு படியெடுத்தல், பதிப்பித்தல், புகைப்படம் எடுத்துப் பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல வரலாற்றுத் தரவுகளும் அது சார்ந்த ஆவணங்களையும் நாம் பெறமுடியும்.

அச்சுக்கு கொண்டு வரப்படும் ஆவணங்களை ஒரு நிறுவனமாக தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போது தொன்மம் சார்ந்த அறிவைப் பெற்ற ஆய்வாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு நமது ஆதாரங்கள் நம்மிடம் இருக் கின்றன என்ற பெருமையோடு நம்மால் கூற முடியும். இதை கேட்டு வலியுறுத்தி பெறும் உரிமை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் உண்டு.

தமிழகத்தில் தொன்மைகளை பாதுகாப்பது மற்ற மாநிலத்தில் உள்ளவற்றை கேட்டுப் பெறு வதோடு நின்று விடுவதில்லை. பழமை வாய்ந்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சமணப்படுக்கைகள், குகைகள், நடுகற்கல், செப்புப் பட்டயங்கள், சுவடிகள் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும் இந்த துறையில் ஆர்வ முள்ள ஆய்வாளர்களை தவறவிடக்கூடாது என்பதே நா.வாவின் விருப்பம்.

தமிழகத்தில் கிடைக்கப்பெறும் வரலாற்றுச் சான்றாதாரங்களோடு ஆய்வுப்பரப்பை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கும் நமது பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்க வேண்டும். குறிப்பாக கேரளாவில் 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சாசனங்கள் தமிழில் உள்ளன. விஜயநகர நாயக்கர்கள், அவர்களின் தளவாய்களான மதுரை நாயக்கர்கள், இவர்களின் தளவாய்கள் அழகப்ப முதலியார், இராமப் பையன், நசரப்பையன், கிருஷ்ணப்பையன் முதலியோரது சான்றுகள் தமிழிலும், மலையாழ்மா என்ற மொழியின் வரி வடிவத்திலும் கிடைக்கப் பெறுகின்றன.

தென் மைசூரில் சமண சமய சாசனங்கள், தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகள், தமிழக சிவனடியார்கள், கங்கர் படையெடுப்புகள், பழைய கன்னடம், நவீன கன்னடம் இவைகள் தமிழ்மொழியில் கிடைப்பனவற்றையுமாவது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆய்வு மனப்பான்மையை உருவாக்கித் தருகின்றார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் வரை பல்லவர்களின் தொன்மங்களும், குல சேகர பாண்டியன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் போன்ற பாண்டியர்களின் தொன்மைகளும், நெல்லூர் வரை பிற்காலச் சோழர்களின் தொன்மைச் சான்றுகளும் கிடைக்கப் பெறுகின்றன. அதே போல 18ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபுகள் நைஜாமின் பிரதிகளாக ஆற்காட்டில் இருந்து ஆண்டனர். அவர்கள் கால அரசியல் மற்றும் போர் நிகழ்வுகள் இவைகளும் வரலாற்றின் முக்கியத் தொன்மங்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிறார்.

இவற்றைப் போலவே வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக மராட்டியர்கள் விளங்கினர் (1801 முதல் 1815 வரை). எனவே இந்த காலகட்டத்தில் பல்வேறு சாசனங்கள் மராட்டிய மொழியில் உள்ளன. அந்த தொன்மை சாசனங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதைப்போலவே சோழர் காலத்தில் சாதியப் பிரிவினைகள் இருந்தன. இது இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அதனுள் இருந்த பல்வேறு சாதிய முரண்களை கல்வெட்டுச் சான்றுகளோடு ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

பல்வேறு வகையான சமூகப் பிரிவுகள் இந்த இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொழில் முறை போன்றவை மீட்டெடுக்கப்படவேண்டும். பொங்கல் விழாவைப் பற்றி தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியைக் கொண்டு நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி அதனை சூரியனுக்கு படையல் இடுவதையும் பூமியின் செழிப்புக்கு காரணம் சூரியன் என மக்கள் நம்பிக்கையையும் பதிவு செய்கிறார். இந்த மகிழ்ச்சி யினை ‘வள்ளைக் கூத்து’ நெல்குத்துவதுபோல ஆடி மகிழ்ந்ததையும் பதிவு செய்கின்றார்.

கர்நாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம் என்ற கட்டுரை ஒன்று ‘புதியவானம்’ என்ற இதழில் நா.வா. எழுதியுள்ளார். தைப்பொங்கல் காணும் பொங்கலில் (ஜனவரி 17ஆம் நாள்) அங்கு பொங்கல் விழாவாக கொண்டாடப்படுவதையும் கதைப்பாடல், கூத்து போன்ற பண்பாட்டு தொன்மைசார்ந்து நடைபெறுவதையும் பதிவு செய்கின்றார்.

நாட்டார் இலக்கியங்களான கதைப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பள்ளுப்பாட்டு, வில்லுப் பாட்டு, கலைகள், பண்பாடு சார்ந்த தொன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது சார்ந்த ஆய்வுகள் வேண்டும். குறிப்பாக மக்கள் இலக்கியமான இலக்கியத்தை மாவட்ட வாரியாக உள்ள பாடல்களைத் திரட்ட வேண்டும். திரட்டப்பட்ட பாடல்கள் முழுமையாக அச்சாக்கம் பெற வேண்டும். நாட்டார் கலைக்காட்சிக் களஞ்சியம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைமுறைகளைக் கடந்து பண்பாடு காக்கப் பெறும் என்பதை முன்வைக்கிறார்.

தமிழகத்தில் தற்போது கலைகளைப் பாது காக்கவும், பண்பாட்டை மீட்டெடுக்கவும் போராட்டம் நிகழ்த்த வேண்டிய சூழலுக்கு

நாம் தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் தொன்மங் களை மீட்டெடுக்க ஆய்வுகளை வளர்க்கவேண்டும் என்று பேராசிரியர் நா.வானமாமலை அன்றைக்கே முற்போக்கு சிந்தனையோடு பதிவு செய்துள்ளார்.

வரலாறு என்பது பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல. அப்படிப் பாதுகாத்தால் மட்டுமே அழியாமல் எதிர்வரும் சமூகம் பயன்பெற விட்டுச் செல்லமுடியும். எனவே நமது அடையாளங் களையும் தொன்மைகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து அவற்றை மீட்டெடுப்பதே நா.வா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும்.

சான்றாதார நூல்கள்:-

1. இந்திய இலக்கியச் சிற்பிகள் நா.வா, தோதாத்ரி, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.

2. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா.வா.

3.  புறநானூறு.

4. கருநாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம், நா.வா, புதிய வானம்- 1972.

5. தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள் (நா.வா. மணிவிழா மலர்) 1978.

6. தமிழரின் பண்பாடும் தத்துவம், நா.வா, என்.சி.பி.எச். 1973, சென்னை.

7. தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும், நா.வா, பல்கலைப்பதிப்பு - 2009.