சனி, 1 ஜூன், 2013

குடியாத்தம் - செருப்பு ஜோசியம்
வயலுக்கு போன கணவன் திடீரென்று மாயமான மர்மம் !...
போலீசில் புகார் கொடுத்தும், விடைதெரியாமல் தவிக்கும் பரிதாபம் !...
செருப்பு ஜோசியம் மூலம் குற்றவாளியை அடையாளம் காட்டும் விநோதம் !...
==========
தனது கடைசி காலத்தில் பெற்ற பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டிய வயதில், வயலுக்குப்போன நபர் திடீரென்று மாயமாகியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக கணவன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் ஒரு அப்பாவி பெண் பூவும் பொட்டோடும் கணவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அந்த பெண்ணின் வாழ்க்கையில் நேர்ந்த பரிதாப சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
கணவன் மர்மமான முறையில் கடத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால் காவல் நிலையத்தின் கதவுகளை தட்டியுள்ளார் ஒரு பெண். ஆனால், அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைத்ததா என்றால், அதுதான் இல்லை. பல முறை, பல வழிகளிலும் போலீசாருக்கு புகார் கொடுத்தும் விடை தெரியாமல் தவித்தபோது செருப்பு ஜோசியம் பார்த்து உண்மயான குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளதாக கூறும் சம்பவத்தின் உண்மயையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட கிராமம் தான் கொட்டமிட்டா. இயற்கையாகவே வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் அனைத்தும் மலை சூழ்ந்த பகுதிகளாகவே அமைந்துள்ளன.
இங்கு உள்ள கிராம மக்களின் முக்கிய தொழில் மா, தென்னை போன்ற பண்ணை விவசாய தொழில்களில் ஈடுபடுவதாகும். இப்படிதான் கொட்டமிட்டா அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர், மா, தென்னை, போன்றவைகளை வளர்த்து விவசாய தொழில்களை செய்து வந்தார்.
விவசாயி கனகராஜூக்கு மணியம்மாள் என்கிற மனைவியும், தீபா, சந்தோஷ், விஸ்வநாதன் என்கிற மூன்று குழந்தைகளோடு இயல்பான வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். அம்பேத்கர் நகர் பகுதியில் கனகராஜின் சொல்லுக்கு மதிப்பளித்து வந்தனர்.
கொட்டமிட்டாவை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கனகராஜ் தலையிட்டு தீர்த்து வைப்பது வழக்கம். இதனால் அந்த பகுதி மக்களிடம் கனகராஜின் செல்வாக்கிற்கு பஞ்சமே இல்லை.
கனகராஜ் என்பவர் யார்? இந்த பகுதியில் இவருக்கு செல்வாக்கு பெருகியதற்கு காரணம் என்ன? இந்த செல்வாக்கு அவரின் உயிருக்கு ஆபத்தாக மாறியதா இல்லையா  என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
அம்பேத்கர் நகர் பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்து இருந்து வந்த கனகராஜ் தினமும் தன் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்திற்கு சைக்கிளில் செல்வது வழக்கம். அவருடைய தோட்டத்தில் தென்னை, மா போன்ற பயிர்களை கண்காணித்து வந்தார்.
இப்படி தான் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் நாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழ்க்கம் போல தனது சைக்கிளில் தனது சென்றார். தோட்டத்திற்கு சென்ற கனகராஜுக்கு என்ன நடக்க போகிறது என்பது தெரியாது.
அதிகாலை ஐந்து மணிக்கு தோட்டத்திற்கு போனவர் மாலை வரை வீடு திரும்பாததால் மனைவி மணியம்மாள் தேடி அலைந்தார். பின்னர் செய்வதறியாமல் திகைத்து போன அவர் வீட்டிற்கு வந்து தனது கனகராஜின் தம்பி கஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தார்.
குடியாத்தத்தில் இருந்து விரைந்து வந்த கஜேந்திரன் பல்வேறு இடங்களில் தன் அண்ணனை தேடியுள்ளார். ஆனால், கனகராஜ் கிடைத்தபாடில்லை. இதனால், மனமுடைந்த கஜேந்திரன் தன் அண்ணி மணியம்மாளிடம் தன் அண்ணனுக்கு எதிரிகள் யாராவது உள்ளார்களா என்ற விவரத்தை கேட்டறிந்தார்.
இந்நிலையில், மறுநாள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது அண்ணன் கனகராஜ் வீடு திரும்பவில்லை எனவும், பல இடங்களில் நாங்கள் தேடியும் கிடைக்கவில்லை எனவும், கொட்டமிட்டாவில் உள்ள சில எதிரிகள் ரவி, சுகந்தி, சவுந்தர் ஆகியோர் கனகராஜை கடத்தியிருக்கலாம் எனவும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
கொட்டமிட்டாவில் செல்வந்தராக இருந்த ரவியின் தோட்டமும் கனகராஜின் தோட்டத்திற்கு அருகிலேயே உள்ளது.  ஒரு நாள் ரவியும், கனகராஜின் மற்றொரு தம்பியின் மனைவி சுகந்தியும் தோட்டத்தில் நெருக்கமாக இருந்துள்ளார்கள். இதை கண்ட கனகராஜ் கொதித்து போய் அவர்களை கண்டித்திருக்கிறார். அப்போது கனகராஜுக்கும் ரவிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.
இந்த பிரச்சனையில் ரவிக்கு உடந்தையாக சவுந்தர் என்பவர் செயல்பட்டார் எனவும், தோட்டத்திற்கு கனகராஜ் சென்ற போது அவரின் தோட்டத்திற்கு டாடா சுமோ கார் ஒன்று சென்று வந்ததாகவும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தனர்.
கனகராஜின் புகைப்படம், காணாமல் போன விவரங்கள், கனகராஜின் எதிரிகள் பெயர கொடுத்த பிறகும் குடியாத்தம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்ரு கனகராஜின் மனைவி மணியம்மாள் குற்றம் சாட்டினார்.
பொது மக்களின் நண்பன் என்றும் காவலன் என்றும் சொல்லிக்கொள்ளும் காவல்துறை 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணையை 2013-ஆம் ஆண்டு கடக்கும் நிலையிலும்  கூட விசாரணையை மேற்கொள்ளாமல் மவுனம் காக்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை என்று பும்புகிறார்கள்.
காவல்துறை கைவிட்ட நிலையில் தன் முன்னோர்கள் பார்த்து வந்த செருப்பு ஜோசியத்தை பார்த்து தன் கணவனின் நிலையை தெரிந்து கொள்ள விரும்பி, இதற்காக ஒரு செருப்பை எடுத்து வந்தார் கனகராஜின் மனைவி மணியம்மாள்..
வீட்டின் வாசலில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்டிருந்த இடத்தில் செருப்புகளை கழுவி, மஞ்சள் பூசி குங்குமத்தால் பொட்டு வைத்து, நடு பகுதியில் ஆணி ஒன்றை அடித்தார். குத்து விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, மஞ்சள் கலந்த அரிசியை கையில் எடுத்துக்கொண்டார் மணியம்மாள்.
செருப்பின் நடுவே அடிக்கப்பட்டிருந்த ஆணியை இரண்டு பேர் இரண்டு விரல்களின் நுனியல் பிடித்து கொண்டனர். மணியம்மாள், தனது கணவன் கனகராஜை கடத்தியவர்களான ரவி, சவுந்தர், சுகந்தி ஆகியோரின் பெயர்களை சொல்லி மஞ்சள் கலந்த அரிசியை செருப்பின் மீது பொருத்தப்பட்டிருக்கும் ஆணியின் மீது போட செருப்பு சுற்ற தொடங்கியது.
இந்த சம்பவத்தை பார்த்தபோது நமக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்ததாக வேறு நபர்களின் பெயர்களை சொல்லும் போது செருப்பு சுற்றாமல் இருந்தது. மீண்டும் கடத்தலில் சம்பந்தபட்டவர்களாக கருதப்படுவர்களின் பெயர்களை சொன்னபோது மீண்டும் சுற்ற தொடங்கியது,
பரம்பரை பரம்பரையாக பார்த்து வரும் செருப்பு ஜோசியம் சொல்வதுதான் உண்மை என்றும், தன் கணவர் கனகராஜ் உயிருடன் திரும்பி வருவார் என்றும் பூவோடும், பொட்டோடும் காத்திருப்பதாக மணியம்மாள் தெரிவித்தார்.
சாதாரணமாக காலில் அணிய கூடுய செருப்புக்கு கானாமல் போனவரை கண்டுபிடிக்கும் அளவிற்கு சக்தி உண்மையில் உள்ளதா? இல்லையா? என்பது ஆராயக்கூடியதாக இருந்தாலும், பலர் இந்த செருப்பு ஜோசியத்தை நம்ப வேண்டியதாக தெரிவிக்கின்றனர். ஆனால், மக்கள் பிரச்சணையை தீர்த்து வைக்க வேண்டிய காவல்துறை கனகராஜ் விஷயத்தில் நான்கு ஆண்டுகளாக மவுனம் காப்பது தான் வேதனக்குரிய ஒன்றாக உள்ளது.
உண்மையில் செருப்பு ஜோசியத்தில் குற்றவாளிகள் இவர்கள் தான் என்று அடையாளம் காட்டினாலும் காவல்துறையினர் ஜோசியத்தை நம்பி ஒரு குற்றவாளியை கைது செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோள் என்னவென்றால், ஒரு ஒப்புக்காக கூட காணாமல் போனவர் குறித்து விசாரிக்கவில்லை என்பதுதான் அவர்களின் அங்கலாய்ப்பாக உள்ளது.
இது போன்ற செயல்களால்தான் மக்களுக்கு காவல்துறையின் மீது இருக்கும் நம்பிக்கை இப்படிதான் படிப்படியாக குறைந்து அவர்கள் மீது நம்பிக்கையின்மயை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
கணவன் கனகராஜை நான்கு ஆண்டுகளாக பிரிந்து தனிமையில் வாடும் மணியம்மாளுக்கு காவல்துறை என்ன பதி சொல்ல போகிறது? கனகராஜ் உயிருடன் இருக்கிறாரா? அல்லது கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்று சந்தேகத்தோடு வாழும் இந்த குடும்பத்தின் கதி என்ன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


=========


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக