சனி, 27 ஜூன், 2026

உத்தர பிரதேசத்தில் டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் - கோ.ஜெயக்குமார்.


உத்தர பிரதேசத்தில் டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்  - கோ.ஜெயக்குமார்.

 

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

 
இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் வெள்ளிக்கிழமை அரண்மனை வளாகத்தை தோண்டி தங்கள் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளனர்.இந்த அரண்மனையில் புதையுண்டு கிடக்கும் தங்கத்தை அரசு கைப்பற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று சாது தெரிவிக்கிறார்.

 
1000 டன் தங்கம் இருப்பதாக கண்ட சாதுவின் கனவு பலித்தால், ஓராண்டுக்கு இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு இணையாக இருக்கும்.அரண்மனைக்கு பின்புறம் இரண்டு இடங்களில் தலா 100 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனினும், அந்த மண்ணில் புதையல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வுக்குழு தலைவர் மிஷ்ரா தெரிவித்தார். 

 
உ.பி.யில் பழங்கால கோட்டையில் பள்ளம் தோண்டி தங்கப்புதையலைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அங்கு பூமிக்கு அடியில் விலை உயர்ந்த உலோகம் இருக்கலாம் என தொல் பொருள் ஆராய்ச்சித்துறை வல்லுனரும், கலெக்டரும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் பழங்கால மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ஷோபன் சர்க்கார் கனவில் தோன்றி, தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகக் கூறிய தகவல் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் கோட்டையில் 1000 டன் தங்கப்புதையலை தேடும் வேட்டையை இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர்.தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தங்கப்புதையல் தேடும் வேட்டை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா தலைமையில், அந்தத் துறை மற்றும் இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த 12 உறுப்பினர் குழு வழிகாட்டுதலில், உள்ளூர் தொழிலாளர்கள் மண்வெட்டி, மண்கொத்தி, கடப்பாரை போன்றவற்றைக் கொண்டு தோண்டி வருகின்றனர்.

 
இதை வேடிக்கை பார்க்க சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக் கான மக்கள் வெள்ளமென திரண்டனர். இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சர்வானந்த் சிங் உறுதிப்படுத்தினார்.தோண்டுதல் பணி நடக்கிற இடத்திற்குள் பொதுமக்கள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு திடீர் கடைகள் உதயமாகி உள்ளன. அங்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை அமைந்துள்ள பகுதியை துளையிடும் எந்திரம் கொண்டு துளையிட்டு பார்த்தபோது 20 மீட்டர் ஆழத்தில், உலோகப்படிமம் தென்பட்டது. அது பாறைபோல இல்லை. அந்தப்பகுதியில், 10-க்கு 10 மீட்டர் பரப்பளவு கொண்ட 3 பள்ளங்கள் தோண்டுவதற்கு இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர், இந்தியப் புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையினர் குறியிட்டுள்ளனர். அந்தப் பள்ளங்களைத் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

 
இதுதொடர்பாக இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா கூறுகையில், "இங்கே தங்கத்தை நாங்கள் கண்டுபிடிப்போமா என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது. ஆனால், எங்களது ஆய்வு, ஏதோ ஒரு உலோகப்படிமம் இங்கு இருப்பதாகக் காட்டுகிறது. அது என்ன உலோகமாகவும் இருக்கலாம். நாங்கள் தங்கப்புதையல் புதைந்துள்ளதாகக் கூறப்படும் இடத்தை (ஆழத்தை) நெருங்கும்போது, அந்த மண் கட்டமைப்பின் மாதிரியை எடுத்து சோதித்துப் பார்த்து அது என்ன உலோகம் என்பதை கண்டறிய முடியும்" என்றார்.


உன்னாவ் மாவட்ட கலெக்டர் விஜய் கிரன் ஆனந்தும், விலை உயர்ந்த உலோகம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர், "இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறை வரைந்துள்ள வரைபடத்தில் பூமிக்கடியில் விலை மதிப்புள்ள உலோகம் இருப்பது காட்டப்பட்டுள்ளது. அது தங்கமா, இரும்பா அல்லது இன்ன பிற உலோகமா என்பதை இப்போது உறுதியாகக்கூற முடியாது" என கூறினார். 

 
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக தன் கனவில் மன்னர் கூறியதாக தெரிவித்தார்.இதையடுத்து அந்த கோட்டையில் கடந்த 18–ந்தேதி முதல் தங்கம் தேடும் பணியை தொல்பொருள் ஆய்வுத்துறை தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) 5–வது நாளாக தங்கப் புதையலை தேடும் பணி நடந்தது.

 

கோட்டையில் அகழாய்வு பணியில் ஓரிரு நாட்களில் தங்கம் வந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தோண்ட தோண்ட மண்தான் வருகிறதே தவிர, இதுவரை ஒரு கிராம் தங்கம் கூட வரவில்லை. இதையடுத்து தங்கப் புதையலை தேடும் பணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோட்டையில் அகழாய்வு நடத்த நாங்கள் உத்தரவிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
 
மத்திய தொல்பொருள் துறையும், ''நாங்கள் துறவி ஷோபன் சர்க்கார் சொன்னதை வைத்து கோட்டையில் மண்ணை தோண்டவில்லை. இது எங்களது வழக்கமான அகழாய்வு பணியாகும். இதில் தங்கம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்'' என்று கூறியுள்ளது.இதையடுத்து தங்கப் புதையலை தோண்டி எடுப்பதை வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள் கூலிப்படைந்தனர். ''தங்கம் இருக்காது'' என்று கூறியபடி மக்கள் கலைந்து வருகின்றனர்.நடந்த அகழாய்வின்போது உடைந்த பொம்மைகள், உடைந்த வளையல்கள்தான் கிடைத்தது. ஒரு செங்கல் சுவர் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சுவர் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று தொல்லியல் துறையினர் கணித்துள்ளனர்.
 


இதையடுத்து கோட்டையின் பிற பகுதிகளில் 5 மீட்டர் ஆழத்துக்கு தோண்ட திட்டமிட்டுள்ளனர். இன்னும் 3 வாரத்துக்கு இந்த அகழாய்வு பணி நடக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. தங்கம் தேடப்பட்டு வரும் மன்னரின் கோட்டை அமைந்துள்ள தாண்டி யாகேதா கிராமத்தில் இப்போது 469 குடும்பங்கள் வசித்து வருகிறது. இன்னமும் அந்த ஊருக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுதந்திரம் பெற்று இவ்வளவு நாட்களுக்கு பிறகும் இருளில் உள்ள அந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக தங்கப் புதையலில் 20 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என்று சாமியார் ஷோபன் கூறியுள்ளார். அதாவது ரூ. 60 ஆயிரம் கோடியை அந்த கிராமத்துக்கு கொடுக்க சொல்கிறார். ஆனால் தங்கம்தான் கிடைத்தபாடில்லை.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidCxFb-zaZpfLFuGL32nfP7DDO9xblniAcGiMy7_WJOVHnYr8NtUP7AOqXbAhy-kecla2WP9igUZ5AONEUAEbvo4eOUS_iXdSRDZ97QDyXgoHd7fqVyV7BckvyQqMVR3oBanrtIGsbHaBT/s640/19TH_FORT_1622999e.jpg
மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல்சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், அந்த பகுதியில் தோண்டும் பணியை தொல் பொருள் ஆய்வுத்துறை நேற்று திடீரென்று நிறுத்திவிட்டதாகவும், தங்கப்புதையல் வேட்டை கைவிடப்பட்டதாகவும், பரபரப்பான தகவல் வெளியானது.
 
தொல்பொருள் துறை அறிவிப்பு

மத்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குனர் பிரவின் ஸ்ரீவஸ்தவா, இந்த தகவலை மறுத்தார். நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், “12 உறுப்பினர்களைக் கொண்ட குழு மேற்கொண்டு வரும் தங்கப்புதையல் வேட்டைக்கான தோண்டும் பணி நிறுத்தப்படவில்லை. மாறாக, தோண்டும் பணியை மேலும் விரிவுபடுத்த இருப்பதாக” தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-“இணையான இரண்டு சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மட்டும் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. அந்த சுவரின் அடிப்பகுதி வரை, 4.80 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டு உள்ளது. கோட்டையை சுற்றி அமைக்கப்பட்ட அகழியின் ஒரு பகுதியில் தற்போது தோண்டி இருக்கிறோம். அந்த அகழி செல்லும் பாதை குறித்த புகைப்படங்கள், வரைபடங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதலாம் நூற்றாண்டு பொருட்கள்


 செங்கல் சுவர்களை அகற்றியபிறகு, இந்த அகழிப்பகுதியில், தோண்டும் இடத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறோம். கங்கை நதி அருகில் உள்ள மற்றொரு இடத்தில் பரிசோதனை அடிப்படையில் தோண்டிப்பார்க்கவும், இந்திய புவியியல் ஆய்வு மையம் யோசனை தெரிவித்து உள்ளது. அதன்படி புதிய இடம் சுத்தம் செய்யப்பட்டு, புதன்கிழமை (இன்று) முதல் தோண்டும் பணி தொடங்கும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7qMO0PhKWWeGV1lDazUAsH2OaO0r5bZZzNQcHIQaIJs_8Lo_cszRRLHQEwmvx1CfIZfPJRZm8FSSREOZxpNNn-uWgXiuJqrQGAdht89vtEEAS0saJFAJVnhaouhzpEw8JAwvlt3p_aL8V/s1600/mcshane+fort.jpeg
இதுவரை தோண்டிய இடத்தில், கண்ணாடி வளையல்கள், இரும்பு ஆணிகள், சிங்கம் ஓவியம் வரையப்பட்ட கற்களின் உடைந்த பகுதிகள் மற்றும் ஓடுகள் போன்ற கி.மு.முதலாம் நூற்றாண்டு, கி.பி. 7, 17 மற்றும் 19-ம் நூற்றாண்டு கால பொருட்கள் சில கிடைத்துள்ளன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவரின் செங்கற்கள், இரண்டு அடுப்புகளும் கிடைத்துள்ளன”.
இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 21 ஜூன், 2026

வள்ளிமலை வரலாறும் வழிபாடும் -சமண சிற்பங்கள் (முனைவர் கோ.ஜெயக்குமார் )

வள்ளிமலை வரலாறும் வழிபாடும் சமண சிற்பங்கள் - முனைவர் கோ.ஜெயக்குமார் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வள்ளிமலை என்ற இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அந்தக் கிராமத்தில் அந்த சிறிய மலைப் பகுதிக்கு அருகே மிகப்பெரிய குளம், அதை ஒட்டிய பகுதியில் வள்ளியின் கோயில் உள்ளது. வள்ளியின் சிலையில் பறவை, உண்டி வில், கவண்கல் உள்ளது போல அந்த சிற்பம் காணப்படுகிறது. இது தினைப் புனத்தில் பறவைகளை விரட்டுவதற்காக, வள்ளியின் கைகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது, இந்தக் கோயில், முருகனுடைய அறுபடை வீடுகளைக் கடந்த, ஒரு முக்கிய மலைக்கோயிலாக, அந்தப்பகுதியில் உள்ள மக்கள் நம்புகின்றனர்.
மேலும் முருகன், வள்ளியை காதலித்ததை, வள்ளியின் தந்தை நம்பிராஜன் பார்த்து விட்டதாகவும், அதனால் முருகன் வேங்கை மரமாக உரு மாறியதாகவும், அதுவே பின்னாளில் தல விருட்சமாக, இருப்பதாகவும், அந்தப் பகுதியில் உள்ள மக்களால் நம்பப்படுகிறது. மலைக்குக் கீழே உள்ள வள்ளியின் கோவிலில் இருந்து மலை மீது உள்ள வள்ளி, முருகன், தெய்வானை கோவிலுக்கு சுமார் 900 கருங்கல் படிக்கட்டுகளைத் தாண்டி பயணப்பட வேண்டும். சிறிய குன்றின் மீது வள்ளி, முருகன், தெய்வானையோடு இருப்பது போன்ற சிலைகள் உள்ளன. வெளியில் நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் வள்ளியின் சிலை பெரிய பாறையில் உள்ளது. இங்கே தினந்தோறும் வழிபாட்டிற்காக ஏராளமான மக்கள், பல்வேறு நம்பிக்கைகளோடு வருகிறார்கள். குறிப்பாக முருகன் வள்ளி சந்திப்பு, இரவு நேரத்திலே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதனால் இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது என்று கூறுகின்றனர். குறிப்பாக குறவர் மக்களுடைய உணவான, அவர்களது வாழ்வியலில் அந்தப் பகுதியில் விளையக்கூடிய கிடைக்கக்கூடிய திணை மாவும், தேனும் படையலிடப்படுகிறது.
மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் சிலை உள்ளது. முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் சிலைகள் உள்ளன. வலது புறம் சென்றால் சற்று தொலைவில் தினைப் புனத்தில், வள்ளி பறவைகளை விரட்டியதாகக் கூறப்படும் பகுதியில், நான்கு கல் தூண்களைக் கொண்ட 5 அடி உயரத்தில் 3 மண்டபங்கள் காணப்படுகிறது. வற்றாத சுனை, வள்ளி மஞ்சள் தேய்த்த இடம், முருகன் நீர் அருந்தியதாகக் கூறும் குமரி சுனை, இந்த சுனை சூரிய ஒளி, சந்திர ஒளி படாத சுனை என்று கூறப்படுகிறது. இங்குதான் வள்ளிக்கு திருமணம் நடந்ததாகவும், யானையாக வந்து விநாயகர், வள்ளியை பயமுறுத்திய சிறிய குன்று யானை போலவே உள்ளதாகவும், இதை யானைக்குன்று என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். மேலும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் என்ற நம்பிக்கை இம்மக்களுக்கு உள்ளது. வள்ளி தினைப்புனத்தில் முருகனுக்காகக் காத்திருந்ததை அப்பகுதி மக்கள் பாடல் மூலமாகக் கூறுகின்றனர். அந்தப் பாடல் வரிகள், "வள்ளி எனும் மலைக்கிழவி வள்ளிமலைக் காட்டினுள்ளே, வள்ளல் அவன் வருவானெனக் காத்திருக்கிறாள்! சொல்லி அவன் வருவானோ? சொல்ல ஒரு மொழிதானோ? சொல்வார் தான் யாருமின்றி தனித்திருக்கிறாள்! கள்ளி அவள் காட்டினுள்ளே, கள்ளன் அவன் மனதினுள்ளே, கள்ளர் பயமின்றியந்த வேடனுக்காகக் காத்திருக்கிறாள்."
என்ற பாடல் வரிகள் மூலமாக அந்த சூழலை அவர்கள் விவரிக்கின்றனர். இந்தக் குன்றுகளில் உள்ள ஒரு கால் தடம் வைக்கும் அளவில் உள்ள பாறைகளின் வழியாகக் கீழே இறங்கி வருகிறபோது, தாமரை இலைகளும் பூக்களும் நிறைந்த, மிகப்பெரிய ஆலமரத்தின் கீழே குளம் ஒன்று எழிலோடு உள்ளது. இதனைக் கடந்து பத்தடி தூரத்தில் இடது புறமாக சமணர் குகையும், சிற்பங்களுக்கும் செல்லும் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சிறிய அளவில் கம்பிகள் சார்ந்த வாயில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
வாயில்களைத் திறந்து உள்ளே சென்றால் கல்வெட்டு ஒன்று தொல்பொருள் துறையால் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டில் காணப்படும் ஆதாரங்கள் ' சமணத் துறவிகளுக்கான இந்த தாழ்ந்த குகையில் பல முக்கிய கங்க பாண அரசர்களின் பிரதிமைகளும், கல் படுக்கைகளும், கல்வெட்டுக் குறிப்புகளும் உள்ளன. இதைக் குடைவித்த அரசன் கங்க இராசமல்லன் (816-843 கி.பி.) ஆவான். இவன் கங்க சிவமாறன் (679-725 கி.பி.) பேரனும், ரண விக்கிரமன் மகனுமாவான் என இங்குள்ள ஒரு கல்வெட்டு குறிக்கிறது. பாண அரசனொருவரின் மதகுருவான பவநந்தியின் சிஷ்யையான தேவசேனையின் பதுமையை இங்குக் காணலாம். இதையும் மற்றொரு பதுமையையும் இங்கு ஸ்தாபித்தவர் சமண குரு ஆர்ய நந்தியாவார் என தொல்லியல் துறை கல்வெட்டு கூறுகிறது.
குறிப்பாக கங்கர்குல அரசன் இராசமல்லன் (816-843 கி.பி) பள்ளிச்சந்தம் கல்வெட்டுகள் பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை சமண சமயத்தில் இல்லை, மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதை சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமண சமயத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளனர். அதுபோலவே கங்க அரசன் நன்கொடை கொடுத்து அமைக்கப்பட்டது வள்ளிமலை சமணர் பள்ளி என்பதை இங்குள்ள கல்வெட்டு ஆதாரங்கள் தெளிவாக்குகின்றன.
இக்குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு திறந்தவெளி குகையின் மேலே சமண உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சமண உருவங்களின் கீழ் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் மூலம் இங்குள்ள குகையில் சமண சிற்பங்களை உருவாக்கியவர் இராசமல்லன் என்ற கங்ககுல அரசன் என்பது தெரிகின்றது.
மேலே உள்ள சமண உருவங்களின் கீழ்ப் பொலியப்பட்டுள்ள எழுத்துக்களில் ஒன்று 'அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்த பிரதிமையைச் செய்தார்' என்றும், இன்னொரு எழுத்தில் ஸ்ரீ பாணராயிரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய 'தேவசேனபட்டாரரின் திருவுருவம்' என்றும், மற்றொரு வரிசையில் 'பாலசந்திரபட்டாரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை என்று கூறுகின்றன. மேலும் தரையில் காணப்படும் கல் படுக்கைகளில் உள்ள கல்வெட்டுகள் தேய்ந்து காணப்படுகின்றன. சமண சமயத்தில் 23 வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர் முக்கூடையின் கீழ் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பங்களின் அமைப்பு முறைகளை பார்க்கலாம்.
இந்தப் பகுதியில் காணப்படும் முதல் தொகுதி சிற்பங்கள் வலது பக்கமாகவும், அடுத்த தொகுதிச் சிற்பங்கள் இடது பக்கமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வலது புறத்தில் ஒரே வரிசையாக ஆறு திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முதலாவது சிற்பம் மிகவும் சிறியதாகவும், நாலாவது திருவுருவம் பெரியதாகவும் மற்றவை இதைவிட சிறியவையாகவும் உள்ளன. நான்காவது சிற்பம் தீர்த்தங்கரரையும், பிற திருவுருவங்கள் சமண சமய அறவோரையும் குறிப்பவையாகும். இந்த தீர்த்தங்கரர் தியானத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இவரது தலைப்பகுதிக்கு மேல் முக்குடை வடிக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பம் முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனக் கருதப்படுகிறது. ஆனால் அவருக்குரிய இலாஞ்சனையோ அல்லது இயக்கர், இயக்கியரது வடிவமோ அருகில் இல்லை. பிற சிற்பங்கள் இந்த தீர்த்தங்கரரைப் போன்ற உருவ அமைப்பினைக் கொண்டிருந்த போதிலும், அவற்றின் தலைக்கு மேலாக முக்குடை வடிவம் காட்டப்படவில்லை, இங்குள்ள சாசனங்களும் இவர்களைச் சமண அறவோர் என்றுதான் கூறுகின்றன.
குகையின் இடதுபக்கத்தில் இரண்டாவது தொகுதிச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவையும் இரண்டு இடங்களில் தனித்தொகுதிகளாக உள்ளன. இடது கோடியில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் இரு வரிசைகளாக வீற்றிருப்பதைக் காணலாம். முதல் வரிசையில் இரண்டு பார்சுவநாதர் சிற்பங்களும், அதனையடுத்து மற்றொரு தீர்த்தங்கரரும் இடம் பெற்றிருக்கின்றனர். பார்சுவ தேவரின் தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பு படம் விரித்த நிலையிலிருக்கிறது. இரண்டாவது வரிசையில் பார்சுவநாதர் பீடமொன்றில் அமர்ந்தவாறுள்ளார். இவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகமும், அதற்கு மேல் முக்குடையும் காணப்படுகிறது. இவரது பீடத்தின் வலப்புறம் மாதங்க யக்ஷன் யானை மீதமர்ந்தவாறும், இடப்புறம் யக்ஷியின் சிற்பமும் சிறியனவாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. (தரணேந்திரனுக்குப் பதிலாக இங்கு மாதங்க யஷன் சிற்பம் காணப்படுகிறது.
இதற்கு அடுத்து ஸ்ருத தேவியின் திருவுருவம் சற்று பெரிய அளவில் அரை வட்ட வடிவ மாடத்தினுள் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தேவி பீடமொன்றில் அமர்ந்தவாறு வலது காலைத் தொங்கவிட்டும், இடது காலைப் பீடத்தில் மடக்கி வைத்தும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் நான்கு கரங்களுள் மேலுள்ள வலது கை அங்குசத்தையும், இடதுகை பாசக் கயிற்றினையும் கொண்டுள்ளன. கீழுள்ள வலதுகை அபய முத்திரையைக் குறித்தும், இடது கை தொடையின் மீது வைத்தவாறும் இருக்க தடித்த உடலமைப்பும், பருத்துத் திரண்ட மார்பகமும்,ஒடுங்கிய இடையும் இச்சிற்பத்திற்கு அணி செய்வனவாக உள்ளன. மேலைக்கங்கர்களது கலைப்பாணியினைக் கொண்ட திருவுருவம் கி.பி.9-10-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஸ்ருத தேவிக்குச் சற்று தொலைவில் அமர்ந்த கோலத்தில் இரு தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் சற்று பெரியவையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது பீடத்தில் சிங்க வடிவங்களும், இருக்கையின் மேற்பகுதியில் நான்கு சாமரம் வீசுவோர் சிற்றுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்களது தலைக்கு மேலாக அரைவட்ட வடிவ பிரபையோ, முக்குடையோ இடம் பெறவில்லை. இவ்விருவருள் முதலாவது தீர்த்தங்கரரின் வலது புறம் மாதங்க யக்ஷன் யானையின் தலைப்பகுதியில் வீற்றிருப்பதைக் காணலாம். இரண்டாவது தீர்த்தங்கரரின் இடதுபுறம் யக்ஷி சிற்பம் ஒன்றுள்ளது. அமர்ந்த வண்ணமுள்ள இந்த யக்ஷியின் வலது கை அபய முத்திரையைக் (அல்லது சிம்ம கர்ண முத்திரை) குறித்தும் இடது கை பழம் ஒன்றினைக் கொண்டும் விளங்குகின்றன. இவளது காலின் அருகில் தனித்தனியாக இரு குழந்தைகளும், அதற்குக் கீழ் சிங்கவாகனமும் இருப்பதைக் காணலாம். இவளது தலையை அலங்கரிக்கும் கரண்ட மகுடத்தின் மேல் சிறிய அளவில் தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த யக்ஷி அம்பிகா,-ம்ர கூஷ்மாண்டினி என அழைக்கப் பெறும் தருமதேவியாவாள். இந்த சிற்பத் தொகுதியில் முதலாவது உள்ள தீர்த்தங்கரர் மகா வீரரைக் குறிப்பதால் அவரது வலது புறம் மாதங்க யக்ஷனையும், அடுத்துள்ள தீர்த்தங்கரர் நேமிநாதராகையால் அவரது இடது புறம் அம்பிகா யக்ஷியையும் செதுக்கியுள்ளனர். இந்த சிற்பங்களும் கங்கர்களது கலைப்பாணியைக் கொண்டவையாக இருப்பதால் கி.பி.9-10-ம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இங்கு தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமின்றி சமண சமய ஆன்றோர்களுக்கும் சிற்பம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருத தேவி சிற்பம் போன்ற காலத்தால் முந்திய திருவுருவம் வேறெங்குமில்லை.
கி.பி. 9-ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிரவண பெலகோலாவைச் சார்ந்த சமணத் துறவியர் சிலர் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளனர். இவர்களுள் ஆரியநந்தி என்பவர் குறிப்பிடத்தக்கவர். இதனை வள்ளிமலை, மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கீழக்குயில்குடி ஆகிய இடங்களிலுள்ள கன்னடக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
கீழக்குயில்குடியிலுள்ள (சமணர் மலை) கன்னடக் கல்வெட்டு பெலகோலாவிலுள்ள மூலச்சங்கத்தைச் சார்ந்த ஆரிய தேவர் (ஆரிய நந்தி), பாலச்சந்திர தேவர் ஆகியோரது பெயர்களையும் நேமி தேவர், அஜிதசேன தேவர், கோவர்த்தன தேவர் ஆகிய துறவியரது பெயர்களையும் குறிப்பிடுகிறது.
குறிப்பாக (கீழக்குயில்குடியிலுள்ள இந்த கன்னட சாசனம் கி. பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என கல்வெட்டுத்துறையினர் கருதுகின்றனர். இது சரியாகத் தோன்றவில்லை. 10-ம் நூற்றாண்டு என இருப்பதே பொருத்தமானதாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர்). ஆரிய நந்தி, பாலசந்திர தேவர் மட்டுமின்றி எஞ்சியுள்ள கோவர்த்தனர், அஜிதசேன தேவர், நேமிதேவர் ஆகியோரும் சிரவண பெலகோலாவைச் சார்ந்த துறவியராக இருக்கலாம். இவர்களுள் கோவர்த்தனருக்கு வள்ளி மலையில் சிற்பமும் சமைக்கப்பட்டிருக்கிறது.
வள்ளிமலையில் முதலாவது தொகுதியில் வரிசையாகக் காணப்படும் சிற்பங்களுள் நாலாவது தீர்த்தங்கரர் வடிவமாகும். இங்குள்ள கல்வெட்டின்படி இரண்டாவது உள்ளது தேவசேனரையும், ஆறாவது உள்ளது கோவர்த்தனரையும் குறிக்கும். ஒன்றாவது, மூன்றாவது, ஐந்தாவது திருவுருவங்கள் எந்த முனிவரைக் குறிப்பவை எனக் கல்வெட்டுக்கள் கூறவில்லை. ஆனால் கீழக்குயில்குடியிலுள்ள சாசனம் கூறும் பெயர்களை அடிப்படையாகக்கொண்டு வள்ளிமலையிலுள்ள முதல் சிற்பம் ஆரிய நந்தியையும், இரண்டாவது தேவசேனரையும், (அஜிதசேன தேவர் என்னும் பெயரை வள்ளிமலையில் தேவசேனர் என்று பொறித்திருக்கலாம்), மூன்றாவது பாலச்சந்திரரையும் (நான்காவது தீர்த்தங்கரர்), ஐந்தாவது நேமிதேவரையும் குறிப்பவையாகத்தானிருக்க வேண்டுமென்று கூறலாம். இந்த ஐந்து அறவோர் சிற்பங்களுக்கேற்ப ஐந்து பெயர்கள் கீழக்குயில்குடி சாசனத்திலும், வள்ளிமலைக் கல்வெட்டில் மூன்று பெயர்களும் இடம்பெற்றிருப்பது இக்கருத்தை மெய்ப்பிக்கிறது.
இந்த ஐந்து துறவியரும் சிரவணபெலகோலாவில் முக்கியப்பொறுப்பில் இருந்தவர்களாக (தலைமைத் துறவியராக) இருக்கலாம். இவர்களுள் கடைசியில் வாழ்ந்தவர் பாலச்சந்திர தேவரின் சீடராகிய ஆரிய நந்தியாவார். இவர் கங்க மன்னனாகிய இராசமல்லன் காலத்தில் வாழ்ந்தவராதலால் வள்ளிமலைக்கு வந்தபோது தமக்கு முன்பு வாழ்ந்த துறவியரின் சிற்பங்களை இங்கு வடிக்க வழிவகை செய்துள்ளார். இவர் இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டபோது உயிர் வாழ்ந்தவராதலாலும், மேற்கூறிய துறவியருக்குப் பின்னர் வந்தவராதலாலும் இவரது சிற்பம் மட்டிலும் சிறியதாக வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வரிசையில் இவரது திருவுருவம் (வலமிருந்து இடப்புறமாகப் பார்த்தால்) கடைசியில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வள்ளிமலையில் சமணக் குகைகளில் திகம்பரத் துறவிகள் வசித்து வந்துள்ளனர். இங்கு ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்ததை சிற்பங்கள் காட்டுகின்றன. இங்கு தீர்த்தங்கரர்கள் சிற்பங்களும், யக்ஷர்கள் மற்றும் யக்ஷியர்கள் சிற்பங்கள், சமண சமய ஆன்றோர்கள் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன. இந்த சிற்பங்கள் சாதவாகனர்கள் மற்றும் கங்கர் ஆட்சிக் காலத்தில், சிற்பங்களின் நேர்த்தி மற்றும் நீண்ட நாட்கள் நிலைபெற்று இருக்க வழுவழுப்பான கருங் கற்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
- முனைவர் கோ.ஜெயக்குமார், தொல்லியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் (கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி சென்னை பல்கலைக் கழகத்தினுடைய, கங்கு தொல்லியல் தேடிய பயணத்தின் ஊடாக, எனது பேராசிரியரும், தமிழ் இலக்கியத்துறை தலைவருமான முனைவர் ஆ.ஏகாம்பரம் அவர்கள் தலைமையில் முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது அவர்களுடன் நான் செல்லும் வாய்ப்பின் காரணமாக உருவான கட்டுரை. இந்த பயண வழிகாட்டுதலில் மிகப்பெரிய உதவி செய்த தினத்தந்தி செய்தியாளர் சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் நியுஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் சகோதரர் குமரன் ஆகியோருக்கு நன்றி.)

வெள்ளி, 1 மே, 2026

சென்னை பல்கலைக்கழக கல்விப் புலத்தில், மாணவர்கள், ஆய்வாளர்கள் உருவாக்கம் -பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் (முனைவர் கோ. ஜெயக்குமார்)

சென்னை பல்கலைக்கழக கல்விப் புலத்தில், மாணவர்கள், ஆய்வாளர்கள் உருவாக்கம் -பேராசிரியர் ஆ.ஏகாம்பரம்- முனைவர் கோ. ஜெயக்குமார்

பேராசிரியரே நீங்கள் விடை பெறவில்லை, விதைகளை விதைத்து விட்டுத்தான் செல்கிறீர்கள். அவை அனைத்தும் விதைகள் அல்ல, வீரியத்தோடு எழுந்து நிற்கும் ஆலமரங்கள். எதிர்கால சமூகத்தின் தூண்களான மாணவர்களை நீங்கள் உருவாக்கி விட்டுத்தான் செல்கிறீர்கள். தமிழகம் மட்டுமின்றி பூமிப்பந்தில் அவர்கள் தமிழின் அறிவுப் புலத்தோடு உங்களது குறிக்கோள்களை அவர்கள் நெஞ்சில் சுமந்து நிலைபெறச் செய்வார்கள். நீங்கள் உருவாக்கிய இந்த ஆய்வுக்குழு மார்க்சிய கொள்கைகளை அறிவுச் சூழலில் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தப் பணி நிறைவு விழா மலர் கட்டுரை துவங்குகிறது.
சாதாரண கிராமச் சூழலில் பிறந்து, கிராம சூழ்நிலைகள் வாழ்ந்து அந்தப் பின்புலத்தில் கல்வி கற்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். அது போல சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியின் உச்சத்தைத் தொடுவது என்பது நிகழ்காலத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது, எட்டாக்கனியாகவே உள்ளது. பேராசிரியர் முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் திருக்கனூர் அருகே உள்ள சித்தளம்பட்டு கிராமத்தில் திரு. ஆறுமுகம், திருமதி. அங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கல்யாணி என்ற ஒரு சகோதரியும் உண்டு. எந்த பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தின் பின்னணியில், இளங்கலை (அறிவியல் அரசியல்) கல்வியை பிரசிடென்சி கல்லூரியிலும், முதுகலை (தமிழ்) மற்றும் ஆய்வில் நிறைஞர்,முனைவர் பட்டங்களை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பி. லிட், எம். ஏ. மொழியியல், பிஜிடிஎப் மொழியியல், முதுகலை ஆங்கிலம் என அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுள்ளார். பேராசிரியரின் இணையர் கோடீஸ்வரி இவர்களுக்கு இளம்பருதி, அறிவுக்கரசு, அமுதவாணன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். நன்கு படித்து பட்டம் பெற்று உள்ளனர்.
நான் மேலே குறிப்பிட்ட குடும்ப பின்னணிக்கும், பேராசிரியர் முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள் படித்த கல்விக்குமான உயரம் என்பது தொடமுடியாத ஒரு உச்சம். நினைத்துப் பார்க்க முடியாத தாகம் அவருக்குள் இருந்துள்ளது. கூடவே பொருமையும் ஓய்வறியா உழைப்பும், அவரது வெற்றியின் ரகசியமாக அமைந்திருக்கிறது. அப்துல் கலாம் கூறுவது போல கனவு காணுங்கள், அந்தக் கனவு உங்களை உறங்க விடக்கூடாது, அது உங்களை வழிநடத்தும் என்று கூறுவார், அதுபோல பல கனவுகளோடு பேராசிரியரின் அறிவுத் தேடல் பயணம் நீள்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் அவர் உதவிப் பேராசிரியராக பணிக்கு சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, தமிழ் இலக்கியத் துறையின் தலைவராக உச்சத்தைத் தொட்டு, இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தான் வகித்த பொறுப்புகளில் இருந்து 31. 05. 2025 அன்று விடைபெறுகிறார். ஜூன் மாதம் விடைபெற வேண்டிய பேராசிரியர் மே மாதமே ஒரு மாதம் முன்கூட்டியே சென்னை பல்கலைக்கழகம் வழி அனுப்புகிறது. ஆனால் நம் இதயங்களில் அவர் நம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாத நிகழ்வுகளோடு நம்மிடையே அசை போட்டுக் கொண்டிருக்கும் பெரும் புகழுக்கு சொந்தக்காரர் பேராசிரியர் ஆ. ஏகாம்பரம்.
பொறுமையும் அமைதியும் இருந்தால், இமயத்தைக் கூட தொட்டுவிடலாம் என்பதைப் போல, தனது கல்விப் புலத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், பல்வேறு நெருக்கடிகளுக்கும், சுமைகளுக்கும், சொல்ல முடியாத போராட்டங்களுக்கும், ஏன் நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல், அதை எல்லாம் தனது மௌனப்புரட்சியால் சுக்கு நூறாக உடைத்து, தகர்த்து எறிந்தவர். அதை சுமையாக நினைத்து துவண்டு விடாமல், தனது லட்சியத்தின் மற்றொரு வடிகாலாக நினைத்து அவற்றில் இருந்து தனது வெற்றியை நிலைநாட்டியவர். சென்னை பல்கலைக்கழகத்தைப் பொறுத்த அளவிற்கு, தமிழ் இலக்கியத்துறையில் பயில்வது என்பது என்னைப்போன்ற கிராமப்புறங்களின் பின்னணியில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் மிகப்பெரிய கனவு. காரணம் அந்தத் துறையில் பல்வேறு மாணவர்களை வளர்த்தெடுக்கும் முறை, கல்வி பயிற்றுவிக்கும் முறையில் தனித்துவம், இதற்கெல்லாம் கால்கோள் இட்டவர், 




சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை தலைவராக இருந்த பேராசிரியர் வீ. அரசு ஒரு முக்கிய காரணம். அவரை பின்பற்றியே பல்வேறு நிகழ்வுகள், பல்வேறு கற்பித்தல் மற்றும் கற்றல் முறை சென்னை பல்கலைக்கழக பரிதிமாற் கலைஞர் வளாகம் செயல்படுகிறது. அவர் பணி ஓய்வு பெற்றதும் பேராசிரியர் கோ. பழனி அந்தப் பணியை பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்கிறார், அதன்பிறகு அந்த இடத்திலே பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் அவர்கள் தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பதவி ஏற்கிறார். மாணவர்களோடு அவர் வகுப்பறையில் பேசுவதாக இருக்கட்டும் அல்லது தனது துறைத் தலைவர் அறையில் பேசுவதாக இருக்கட்டும், தொலைபேசியில் பேசுவதாக இருக்கட்டும், கங்கு போன்ற தொல்லியல் களங்களுக்கு அழைத்துச் சென்று களத்திலே மாணவர்களோடு அவர் பழகுவதாக இருக்கட்டும், உரையாடுவதாக இருக்கட்டும் அனைத்துமே ஒரே அன்பும், பொறுமையும், நிதானமும் இருக்கும். இவற்றை எப்போதுமே அவர் கடைப்பிடிப்பார்.
பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் இதுவரை எழுதியுள்ள நூல்கள் மொத்தம் 17, 36 பேர் முனைவர் பட்டம், 45 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் முடித்துள்ளனர். குறிப்பாக அவர் எழுதியுள்ள மக்கள் வாழ்வியல், தமிழரின் விருந்தோம்பல், சாதி- வறுமை -அரசு, மொழி-வரலாறு- அரசியல், சக்தி கோவிந்தனின் சிறார் மொழி, மொழியும் சமூக அமைப்பும், தமிழ் இஸ்லாமிய மரபுகள், மொழி, இன இலக்கிய ஆய்வுகள், சங்க இலக்கிய தொகுப்பு முறையியல், மக்கட்பா (குறுந்திட்ட ஆய்வு), மறைமொழி சமூகசாரம் உள்ளிட்ட நூல்களை, பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும், முதுகலை மாணவர்கள், ஆய்வியல் இளைஞர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என தமிழ் சமூகத்திற்கு வழங்கியது மிகப்பெரிய கொடையாகும்.
குறிப்பாக மாணவர்கள் தங்களுடைய முதுகலை மற்றும் ஆய்வியல் இளைஞர் (தற்போது இல்லை) முனைவர் பட்ட ஆய்வாளர்களாக இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் தலைப்பிலே முனைப்பாக, பல்வேறு ஆய்வுக்களங்களோடு களத்திற்கு சென்று, நூலகங்களுக்கு சென்று பல்வேறு புரிதல்களோடு ஆய்வு நேர்த்தியாக அமைய வேண்டும், மாணவர்கள் வந்த துறையில் தெரிந்த அறிவைப் பெற வேண்டும் என்பதில், அவருக்கு நிகர் அவராகத்தான் இருக்க முடியும். குறிப்பாக ஆய்வு முடித்து புறத்தேர்வுக்காக அனுப்பக்கூடிய ஆய்வுகள், டில்லி, பாண்டிச்சேரி போன்ற எந்த பல்கலைக் கழகங்களுக்கு சென்றாலும், தனது மாணவர்களுடைய பெயர் அந்தப் பல்கலைக்கழகங்களில் பேசப்பட வேண்டும் என்பதை அவர் எப்போதும் எதிர்பார்ப்பார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் நான் ஆய்வியல் நிறைஞர் பட்டம் நிகழ்த்திவிட்டு, முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்துவதற்காக, ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் அவர்களிடம் பயில வேண்டும் என்ற நோக்கத்திற்காகக் காத்திருந்தேன். எனது காத்திருப்பை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். உறுதியாக உங்களுக்கு வழங்குகிறேன் என்கிற அந்த உறுதியை அவர் எனக்கு தெரிவித்தார். அப்படித்தான் எனக்கும் அவருக்குமான அந்த உறவு தொடங்கியது. உறவின் தொடக்கம் ஆசிரியர், மாணவர் என்ற நிலையில் இருந்தாலும், நான் முனைவர் பட்டம் சேர்வதற்கு முன்பாகவே, பேராசிரியரும், நானும் ஒரு நண்பர்களாக மாறிவிட்டோம். பேராசிரியர் என்கிற நிலையைக் கடந்து எப்போதுமே என்னிடம் ஒரு சகோதரனைப் போல, ஒரு நண்பனைப் போல, ஒரு குடும்ப உறவைப் போலத்தான் பழகுவார், பேசுவார். எங்களது பயணம், இந்த அன்பின் பிணைப்பிலேயே இந்த நிறைவு விழா நாள்வரை தொடர்கிறது. இதைக் கடந்து உயிர் உள்ளவரை அது தொடரும். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இந்த வளாகம் கட்டமைத்திருக்கக்கூடிய கல்வி, அது சார்ந்த கட்டமைப்பு என்பது ஆசிரியர் மாணவர் என்கிற உறவைக் கடந்து, எந்த நிலைக்கு அந்த உறவு நிலைபெறுகிறது என்பதற்காக இதை நான் இங்கே பதிவிடுகிறேன்.
எனது முனைவர் பட்ட ஆய்வு டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் உமாதேவி அவர்கள் அறிவிப்பு பலகையில் வைத்து, இது போன்று ஆய்வு இருக்க வேண்டும் என்று கூறியது, அதேபோன்று புறத்தேர்வாளர் பேராசிரியர் உமாதேவி அவர்கள் வழங்கிய பல்வேறு கருத்தியல்களை, பாராட்டுக்களை எனக்கு இந்த ஆய்வின் நோக்கம் முழுமை பெற்றுவிட்டது ஜெயக்குமார் என்று தெரிவித்தார் பேராசிரியர். அதேபோன்று பாண்டிச்சேரி பேராசிரியர் அறிவுநம்பி புறத்தேர்வாளராக அவர் வழங்கிய, பாராட்டுக்களில் சில வார்த்தைகளை அவர் எனக்குத் தெரிவித்தார். இதெல்லாம் எனக்கு அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாணவன் தனது ஆய்வுப் பயணத்தில் எப்படியெல்லாம் அவன் பங்காற்றுகிறான், அவனை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு சிறிய மகிழ்வை கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், ஒரு ஆசிரியராக அதை எனக்கு நினைவுபடுத்துவார்.
எனது ஆய்வேடு பேராசிரியர் நா. வானமாமலையின் ஆய்வுப் பணிகள் என்ற தலைப்பில் மேற்கொண்டேன். அந்த ஆய்வேடு எப்படி உருவாக்கம் பெற வேண்டும், அந்தத் தலைப்பிற்குள் எப்படி ஒரு ஆய்வாளனாக இயங்க வேண்டும், நாவாவின் மார்க்சிய கண்ணோட்டங்களை எப்படி அணுக வேண்டும், நாட்டார் இலக்கியத் துறையில் அவர் பார்வை, அணுகு முறைகளை பின்பற்றியுள்ளார் என்பது குறித்து பல நேரங்களில் நாங்கள் விவாதிப்போம், அதோடு இல்லாமல் அந்த ஆய்வு முழுமையான ஒரு ஆய்வாக இருக்க வேண்டும், பேராசிரியர் நா. வா நடத்திய ஆராய்ச்சி இதழ், அவர் பங்களிப்பு செய்த புதிய வானம் தாமரை சாந்தி உள்ளிட்ட இதழ்கள் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், மார்க்சியம், நாட்டார் இலக்கியம் உள்ளிட்ட சமூகவியல் சார்ந்த கண்ணோட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதில் இருவருமே கண்ணும் கருத்துமாக இருந்தோம். குறிப்பாக நா. வாவின் ஆய்வுக் குழுவில் பங்காற்றிய நாவாவோடு பழகிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, காரல் மார்க்ஸ் நூலகத்தினுடைய நிறுவனர் கண்ணன், பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியன், பொன்னீலன், பேராசிரியர்கள் முத்துமோகன், நா. ராமச்சந்திரன், காமராசு மற்றும் மங்கை அக்கா, அவரது பிள்ளைகள் நேர்காணல் என ஆய்வு விரிவடைந்தது. மிகப்பெரிய ஆய்வாக உருவாக்கம் பெற்ற போது, சென்னை பல்கலைக்கழகத்தில் 'டெல்லி' பாண்டிச்சேரி போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவது சிரமம் என்று பல்கலைக்கழக அஞ்சல் துறையில் கூறியபோது, என்னுடன் பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் நேரில் வந்து, இதை இதற்கு மேல் குறைக்க முடியாது, ஒரு முக்கியமான ஆய்வேடு, நீங்கள் புரிந்துகொண்டு உடனடியாக அனுப்புங்கள், நாங்கள் அஞ்சலக கட்டணத்தை செலுத்தி விடுகிறோம் என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு நாங்களே அனுப்புகிறோம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்தது.
அடுத்ததாக எனது முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வின் போது, சென்னை மாநில கல்லூரியில் இருந்து பேராசிரியர் மகாலிங்கம் அவர்கள் புறத்தேர்வாளராக வருகை தந்திருந்தார். ஆய்வாளராக எனது கருத்து நிலைகளை நான் ஒருமணிநேரம் எடுத்து வைத்த போது, அவர் பாராட்டிய வார்த்தைகளையும் மறக்க முடியாது. அந்த அவையிலே திடீரென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக இருந்த தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் நேரடியாக வந்து வாழ்த்திப் பேசி சிறப்புரை ஆற்றியதை மறக்க முடியாது. இந்த நிகழ்வுகளையும் எனக்கு அடிக்கடி பேராசிரியர் நினைவுபடுத்துவார். பல்கலைக்கழக வரலாற்றில் நல்லகண்ணு போன்றவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு நேரில் வந்து, வாழ்த்துவது என்பது மறக்க முடியாத தருணம் என்பதை அவர் எனக்கு சுட்டிக்காட்டுவார். மாணவர்கள் படிப்பை முடித்துச் சென்றாலும், ஆய்வாளர்கள் ஆய்வை நிறைவு செய்து சென்றாலும் அவர்களோடு தொடர்பிலிருந்து மனம் திறந்து பேசக்கூடிய, வழிகாட்டக் கூடிய பேராசிரியராக அவர் திகழ்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் ஆய்வாளராக இருந்த தருணத்தில் பேராசிரியர் நான் வானமாமலை பதிப்பித்த கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, வீரபாண்டியக் கட்டபொம்மன் கதைப்பாடல், ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் துணைப்பாடம், முத்துப்பட்டன் கதை, கான்சாகிப் சண்டை, வீணாதி வீணன் கதை என எட்டு கதைப்பாடல் நூல்களைக் கொண்ட கதைப்பாடல் திரட்டு என்ற தொகுப்பு நூலாகக் கொண்டு வந்தேன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியோடு நாவாவின் ஆக்கங்கள் - ஆய்வு என்று நூலும், நாவா ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம், தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும் உள்ளிட்ட தொகுப்பு நூல்களையும், என். சி. பி. எச். நிறுவனத்தின் மூலமாக நா. வானமாமலையின் ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் நா. வானமாமலை ஒரு பருந்துப் பார்வை ஆகிய நூல்களையும், கண்ணாடி பொம்மை என்கிற கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல்களுக்கு பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் வழங்கிய வாழ்த்துரையில் எனது அன்பிற்குரிய ஆய்வு மாணவர்களில் தலைசிறந்த தலைமாணாக்கராக திகழ்பவர்தான் முனைவர் கோ. ஜெயக்குமார் என்று குறிப்பிட்டிருப்பார். மேலும் இது போன்ற பல நூல்களை நீங்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்று கூறுவார். ஆசிரியர் மாணவர் என்ற நிலையைக் கடந்த அன்பு என பதிவிட்டு இருப்பார். இப்படி பெரிய ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் எதுவும் இல்லாமல், மிகப் பெரிய இலட்சியத்தோடு பயணிக்கக் கூடிய, பேராசிரியரின் இந்தப் பயணம், பல மைல்கற்களை கடந்து வந்தவர். அதனை அவர் நேர்த்தியாக தொடர்ந்து கடப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. பணி ஓய்வு என்று சொல்லக்கூடாது என நினைக்கிறேன். ஒரு இலக்கிய ஆளுமைக்கு பணி ஓய்வு என்பது எப்போதும் இல்லை. பணி நிறைவு என்று தான் சொல்ல வேண்டும், அப்படி பணி நிறைவோடு சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து செல்லும் பேராசிரியர், வாழ்நாள் முழுவதும், எல்லா நிலைகளிலும் நிறைவாக வாழ இந்தத் தருணத்தில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

 

முனைவர் கோ. ஜெயக்குமார், உள்ளீட்டு பிரிவு ஆசிரியர் மற்றும் தலைமைச் செய்தியாளர், நியூஸ் ஜெ தொலைக்காட்சி, சென்னை.

திங்கள், 17 ஜூலை, 2023

தமிழக வரலாற்றில் செஞ்சி கோட்டை - முனைவர் கோ.ஜெயக்குமார்

தமிழக வரலாற்றில் செஞ்சி கோட்டை முனைவர் கோ.ஜெயக்குமார்

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது.



இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.



செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.




ஜைனர்கள்

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.




பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)

பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .



சோழர்கள் காலத்தில் செஞ்சி (900-1103)

செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.


பாண்டியர்கள் காலத்தில் செஞ்சி (1014-1190)

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.




விஜயநகரப் பேரரசுக் காலத்தில்

13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.




அமைப்பு

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.



தற்போதைய நிலை.

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அதிலிருந்து பழங்கால சுவர்களில் கிறுக்குவதும்..ஞாயிற்று கிழமை டாஸ்மார்க் பார் .. காதலர்களுக்கான கடலை மையமாக இப்போது விளங்கிவருகிறது.




இருப்பிடம்

மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம்.



பல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .



செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.



செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.


போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.